எம்பிலிப்பிட்டிய நகரிலுள்ள மெண்டிஸ் கட்டடத்தில் கடந்த 4ஆம் திகதி நடந்த வைபவமொன்றில் பொலிஸார் தலையிட்டதையடுத்து மேல்மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தன எனும் இளைஞரின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணைத் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது.
இந்தத் தீர்ப்பு நேற்றே வழங்கப்படவிருந்தபோதிலும் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட இரத்தினபுரி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்க சற்றுத் தாமதமாகிவிட்டதால் தீர்ப்பு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக எம்பிலிப்பிட்டிய மேலதிக நீதிவான் பிரசன்ன பர்னாந்து அறிவித்திருந்தார்.
அண்மையில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்த இந்த அசம்பாவிதம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகவிருந்ததால் நீதிமன்ற வளவில் பெரும் பதற்றநிலை உருவாகியிருந்தது. அதன் காரணமாக நீதிமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதனை அண்மித்த வீதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படவிருப்பதால் அதே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.