ஏக்… தோ…டீன்! புரிதலும் பார்வையும்

610

Alakkuvatarkul teenage foster children, 'Enough is enough' becomes synonymous with parents. Why is it so confusing that the season

டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விடுகிறது பெற்றோருக்கு. அந்தப் பருவம் ஏன் அத்தனை  குழப்பமானதாக இருக்கிறது? பிள்ளைகளைப் பொறுத்த வரை அந்த வயது, எல்லா பிடிகளையும் உடைத்துத் தகர்த்து சுதந்திரமாவதற்கு உந்துகிறது.  பெற்றோருக்கோ, அது இழுத்துப் பிடித்துக் கட்டுக்குள் வைக்கத் தூண்டுகிறது. பிள்ளைகளை எப்போதும் முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ள  முடியாது. நீங்களோ, நானோ – அந்த பருவத்தில் நம் பெற்றோர் நம்மை முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்வதை விரும்பினோமா?

வளர்ச்சி என்பது, யாருடைய தயவும் – குறிப்பாக பெற்றோரின் சார்பு இல்லாமல் வளரப் பழகும் ஒரு விஷயமும்கூட. அந்த முயற்சியில் அவர்கள்  புதிய விஷயங்களை மேற்கொள்ளும் போது, பெற்றோராகிய நமக்கோ, அது நம்மை எதிர்க்கும் செயலாகத் தெரிகிறது. இதில் பெரிய சோகம் என்ன  தெரியுமா? பெற்றோரின் அருகாமையின்றி வாழ அவர்கள் நினைப்பதும்,  எதற்கெடுத்தாலும் நம்மை நாட வேண்டும் என நாம் நினைப்பதும்தான். நாம்  நெருங்கிச் செல்வதும், அவர்கள் விலகியிருக்க விரும்புவதும் இந்தப் பருவத்தில் தவிர்க்க முடியாதது.

இவற்றின் காரணமாக டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கிற எல்லா வீடுகளிலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே சச்சரவுகள் தவிர்க்க  முடியாமலிருக்கின்றன. இந்தச் சச்சரவுகள் ஒரு விதத்தில் ஆரோக்கியமானவை. ஏனென்றால், இந்த சச்சரவுகளின் மூலம் மனத்தெளிவும் முதிர்ச்சியும்  உருவாகும். டீன் ஏஜ் பிள்ளைகளுடன் வாழ்வதென்பது கிட்டத்தட்ட ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வதற்குச் சமமானது. அத்தனை நாள்  உங்களுடனேயே வளர்ந்த உங்கள் பிள்ளைகள்தான்… டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும் தமது நடவடிக்கைகளின் மூலம் உங்களை புதை குழிக்குள்  இழுப்பார்கள்.

அப்படியொரு ஆழத்தை அதுவரை நீங்கள் கற்பனைகூட செய்திருக்க மாட்டீர்கள். உங்கள் மகனோ, மகளோ நீங்கள் அதுவரை நினைத்துப் பார்க்காத  அளவுக்கு உங்கள் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டு போவார்கள். உங்களை இனம்புரியாத மன அழுத்தத்தில் தள்ளுவார்கள். அத்தனை நாள்  உங்களுக்குள் இருந்த நம்பிக்கைகளை எல்லாம் சிதைத்து உங்களை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு செல்வார்கள்.கஷ்டத்தை சொல்லும் போது  நன்மையை யும் பேசித்தானே ஆக வேண்டும்?

டீன் ஏஜ் பிள்ளை வளர்ப்பு கடினமான ஒன்றுதான். அப்படி இல்லை என்று கூறுபவர்கள், ஒன்று உண்மையை மறைக்கிறவர்களாக இருப்பார்கள்  அல்லது அவர்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற அலட்சியப்போக்குடன் இருப்பவர்களாக இருப்பார்கள். இதில் உண்மை  என்னவென்றால், பிள்ளைகளால் நாம்  எவ்வளவு கஷ்டப்பட்டாலும் டீன் ஏஜ் பிள்ளைகளிடமிருந்து நாம் அடைகின்ற மகிழ்ச்சியும் சிரிப்பும்  கும்மாளமும் நிறைவும் வேறு எதிலும் கிடைப்பதில்லை.

இன்றைய விடலைப் பருவத்தினர், பல விஷயங்களில் நாம் வியக்கும் அளவுக்குப் பிரமாதமாகவே நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம்  விளையாட்டாகக் கேட்டுப் பாருங்களேன்… ‘என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் என எல்லோரும் எப்போதும் என்  வாழ்க்கையில் என்னுடன் இருக்க வேண்டும்’ என்றே விருப்பம் தெரிவிப்பார்கள். டீன் ஏஜ் பிள்ளைகளைப் பொறுத்த வரை அவர்கள் அந்த வயதில்  திடீரென உருவாகிற பக்குவம் என்கிற பள்ளத்தைக் கடக்க, யாரோ ஒரு பெரியவரின் உதவியை எதிர்பார்க்கவே செய்கிறார்கள்.

தாம் குழந்தைகளைப் போல அல்லாமல் பெரியவர்களாக நடத்தப்பட வேண்டும் என்றும், தமக்காகவும் மற்றவருக்காகவும் பொறுப்புகளை சுமக்கவும்  விரும்புகிறார்கள். அவர்களைக் கொஞ்சம் நெருக்கத்தில் அணுகிப் பார்த்தீர்களானால் சில விஷயங்கள் உங்களுக்குத் தெளிவாகும். ‘எனக்கு என்  குடும்பத்துடன் இணைந்திருக்கவே பிடிக்கும்’ என்பார்கள். அதில் பெற்றோர்தான் பிரதானம். அதை அவர்கள் வெளிப்படையாக வெளியே சொல்லிக்  கொள்ள மாட்டார்கள். ஆனாலும், சுதந்திரத்தை நோக்கிய அவர்களது விடுதலைப் போராட்டத்தில் பெற்றோரின் தேவையை அறிந்தே நடந்து  கொள்வார்கள்.

‘என்னுடைய செயல்களுக்கு நானே பொறுப்பு’ என்பார்கள். டீன் ஏஜ் பிள்ளைகள் பெரியவர்களாக நடத்தப்படுவதையே விரும்புகிறார்கள். அப்படி  பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்கிற போது அவர்களுக்குத் தாமும் கவனிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு வரும்.‘என்னால் முடிந்த  பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன்’ என்பார்கள். தனது சமூகத்தில் தனது பங்களிப்பை, மற்றவர்கள் கவனிக்கும் வகையில் செய்ய அவர்களுக்கு  விருப்பமிருக்கும். ‘நான் என்னுடைய சக வயதினருடன் இணைந்திருக்க விரும்புகிறேன்.

அது உங்களுக்குப் புரியாம லிருக்கலாம்’ என்பார்கள். டீன் ஏஜில் அவர்கள் செல்போனிலோ, சாட்டிங்கிலோ செலவிடுகிற எல்லா நேரமுமே கெடுதல்  என அர்த்தமில்லை. பெற்றோராகிய உங்கள் கண்காணிப்பும் கவனிப்பும் இருக்கிற வரை அவர்கள் உங்களை மீறித் தவறு செய்யும் வாய்ப்புகள்  குறைவு.‘விதவிதமான மக்களுடன் நான் பிணைந்திருப்பதே எனது விருப்பம்’ என்பார்கள். மனித அனுபவத்தின் பரந்த நிலையைப் பற்றியும், பல்வேறு  கலாசாரங்களைப் பற்றிய நுண்ணறிவும் தம் முந்தைய தலைமுறையினரை விடவும் இக்கால விடலைப்பருவத்தினர் அதிகமாக  கைக்கொண்டிருப்பார்கள்.

அதனால் இப்பிள்ளைகள் சாதி, மத, இன, திறன், பாலின பேதங்களின்றி எல்லோரையும் ஒரு கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.டீன் ஏஜ்  பிள்ளைகளைப் பொறுத்த வரை அவர்கள் குடும்பம், நண்பர்கள், பள்ளித் தோழமை என எல்லோருடனும் இணைந்திருக்கவே விரும்புகிறார்கள்.  பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் தரப்பிலிருந்து சின்ன முனைப்பு இருந்தாலும், டீன் ஏஜ் பிள்ளைகள் மிகப் பெரிய பங்களிப்பைத் தருவார்கள்  என்கின்றன இது பற்றிய ஆய்வுகள்.அவர்கள் ‘மற்றவர்களுக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா… என் திறமைகளை வெளிப்படுத்த  ஒரு மேடை கிடைக்காதா…’ என்ற தவிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருப்பவர்கள்.

அதற்கு நாம் வகை செய்ய முயற்சிக்க வேண்டும். மிகவும் விறைப்பான பிள்ளை கூட பெற்றோரின் அரவணைப்புக்கு ஏங்கும். ‘நீ எனக்கு முக்கியம்’  என்று கூறும் உங்கள் பார்வையையும் செயலையும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.டீன் ஏஜ் பிள்ளைகளைப் பற்றிய நமது தவறான  புரிதலும் பார்வையும்தான் பல பிரச்னைகளுக்கும் காரணம். பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமிடையே பிரச்னைகள் வர சில பிரதான  காரணங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

1. பாலியல் சிந்தனைகள் என்பது பதின்ம வயதுப் பிள்ளைகளின் வாழ்க்கையில் உடலளவிலும் உள்ளத்தளவிலும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு  சாதாரண விஷயம். டீன் ஏஜின் தொடக்கத்தில் ஆண், பெண் என இருவருக்கும் உடலளவில் உண்டாகும் மாற்றங்கள், அவர்களுக்கு அவர்களது உடல்  மீதும், எதிர்பாலினத்தார் மீதும் இனம் புரியாத கவர்ச்சியை உண்டாக்கும். உடலளவில் தயார் என்றாலும், மனதளவில் செக்ஸ் அனுபவங்களுக்கு  முயற்சி செய்யவோ, விளைவுகளை சந்திக்கவோ பக்குவமற்றே இருப்பார்கள். வயதுக் கோளாறில், உணர்ச்சிவயப்பட்டு செய்கிற தவறுகளின்  விளைவுகளால் தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய்கள் போன்றவற்றை சந்திக்க நேருமோ என பெற்றோர் பயப்படலாம். ஆனால், பெற்றோர் டீன்  ஏஜில் இருந்ததைவிட, இன்றைய பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அதிகமாகவே இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

2. பெற்றோரின் அடுத்த கவலை, பிள்ளைகளின் குற்றச்செயல் ஈடுபாடு. பெரும்பாலான குற்றங்களில் ஈடுபடுகிற டீன் ஏஜ் பிள்ளைகள் ஒரு சிறிய  பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். சில குடும்பங்களில் வன்முறைச் சூழலில்தான் பிள்ளைகள் வளர வேண்டியிருக்கும். அவர்களில் சிலர் குற்றப் பின்னணி  உள்ள கூட்டத்துடன் ஐக்கியமாகலாம். படிப்பும், அதைத் தொடர்ந்த நல்ல வேலையும்தான் எதிர்காலம் என்கிற சிந்தனையுடன் வளர்கிற பிள்ளைகள்  இது போன்ற தவறான வழிகளுக்குப் போவதில்லை. டீன் ஏஜ் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  பள்ளிக்கூடங்களிலும் வீடுகளிலும் குற்றங்கள் புரிந்து கையும், களவுமாகப் பிடிபடும் டீன் ஏஜ் பிள்ளைகளையும் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம்.  ஆமாம்… ஒரு காலத்தில் இவை குற்றங்களாகவே கருதப்படாததும், அப்படியே குற்றங்களாகப் பார்க்கப்பட்டாலும் பெற்றோராலும் ஆசிரியர்களாலுமே  அணுகி, சரி செய்யப்பட்டதும்தான் காரணம்.

3. அடுத்து இந்த வயதில் பிள்ளைகள் குடி, போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிற அபாயங்கள் அதிகம். குடிக்கப் பழகுவது என்பது, தான்  பெரியவனாகிற பயணத்தில் தவிர்க்க முடியாத  நிகழ்வு என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது.

டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோராக உங்கள் பங்குதான் என்ன? 

  • மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியானது ஹார்மோன்களை சுரக்கத் தொடங்கும் போது, குழந்தையின் உடலில் மாற்றங்கள்  ஆரம்பமாகின்றன. பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜெனும், ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோ ஸ்டீரோனும் அவர்களது உடலில்  உண்டாகிற பருவ வயது மாற்றங்களுக்குக் காரணங்கள். உடலில் அடுத்தடுத்து உண்டாகிற மாற்றங்களைப் பார்க்கிற அவர்களுக்கு, அவர்களது  தோற்றத்தின் மீதான ஆர்வமும் அதிகரிப்பது இயல்பே.
  • அவர்களது உடலில் உண்டாகிற மாற்றங்கள் வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும், அது அவர்கள் முழுமையாகப் பக்குவப்பட்டதற்கான  அடையாளமல்ல என்பதை உணரச் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. அவர்கள் எப்படியிருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ளச் சொல்லி,  அவர்களுக்குள் காணப்படுகிற அத்தனை பாசிட்டிவான விஷயங் களையும் நினைத்துப் பெருமை கொள்ளச் சொல்ல வேண்டியதும் பெற்றோரின்  கடமை.
  • டீன் ஏஜில் அவர்களது முன்மண்டை மூளைப்பகுதியில்  உள்ள  நியூரான் படிவங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். எதிர்காலத்தைக் கையாளும்  முடிவெடுக்கும் திறன் மற்றும் மதிப்பீட்டுத்திறன் ஆகியவை உருப்பெறுகின்ற பாகம் இது. இந்த பாகத்தில் நரம்புக்கோள்களின்  இணைப்புகள்  வெகுவாக வளர்ச்சி அடைந்த பிள்ளைகளிடம் வயதுக்கு மீறிய சிந்தனையைக் காணலாம். இந்த வயதில்தான் அவர்கள் தமது மனநிலையில்  உண்டாகிற மன அழுத்தம், சோர்வு, படபடப்பு போன்றவற்றையும் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.
  •  டீன் ஏஜில் பெண்களும் ஆண்களும் கோட்பாடுகளில் வித்தியாசப்படுவர். பெண்கள் உறவுகளின் அடிப்படையில் சிந்திப்பர். ஆண்களோ காரண  காரியங்களின் அடிப்படையில் சிந்திப்பர். எப்படி இருப்பினும் டீன் ஏஜ் பிள்ளைகள் வளர வளர அவர்களின் கொள்கைப்பற்றும் சேர்ந்தே  வளரும்.  அதனால் அவர்கள் மறுப்புக்கு இடமற்ற நம்பிக்கைகளை கைப்பற்றுவது மட்டுமல்லாமல், மற்றவர்களும் அதே போல சிந்திக்க வேண்டும் என்றும்  எதிர்பார்ப்பார்கள். இக்கொள்கைகள் பெரும்பாலும் சுற்றியுள்ளவர்களின் கலாசாரத்தையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கும்.
  • உடலுக்கும் உள்ளத்துக்குமான குழப்பப் போராட்டத்தில், ‘எனக்கு எது நல்லது?’ என்கிற கேள்வி அவர்களுக்கு எழும். தன்னுடைய சமூகத்தில்  முறையான, முறையற்ற நடத்தை எது என்கிற கேள்வி வரும். தான் வளர்ந்த சூழலைச் சார்ந்த நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் வளர்த்துக் கொள்வார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்களது செயல்களும் இருக்கும்.கடவுளைப் பற்றி, உண்மையைப் பற்றி,  கல்வியின் மதிப்பு பற்றியெல்லாம் அவர்களது சிந்தனைகள் விரியும். அவர்களது சிந்தனைகளுக்கும், பெற்றோரின் சிந்தனைகளுக்கும் நிறைய  வேறுபாடுகள் இருக்கும்.
  • இந்த நேரத்தில்தான் பெற்றோர், தம் டீன் ஏஜ் பிள்ளைகளின் நம்பிக்கைகள் பற்றித் தம்மைத் தாமே கேள்விகள் கேட்கப் பழக்க வேண்டும்.  மற்றவர்களின் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றுவதற்குப் பதில், அவற்றை வேறு விதமாகப் பார்க்க,  யோசிக்க ஊக்கப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான உறவுகளின் மூலம்தான் குழந்தைகள் மத்தியில் நல்ல மதிப்புகளைப் பதியச் செய்ய முடியும்.  இளைய சமுதாயத்துக்கு, அவர்கள் பார்க்கிற, பழகுகிற பெரியவர்களே ரோல் மாடல்கள்.
  • அவர்கள் சிந்திக்கும், அக்கறை கொண்ட மனிதர்களாக உண்டாவதற்கு நம்முடன் அவர்கள் கொள்ளும் உறவு பெரிதும் ஊக்கப்படுத்துகிறது.
  • ‘ஐயோ! இது டீன் ஏஜ். பிள்ளைகளுக்கும் நமக்கும் இனி போராட்டம்தான்’ என்று பதற வேண்டியதில்லை. உண்மை என்னவென்றால், பெரும்பாலான  பிள்ளைகள் பதின்ம வயதை எளிதாகவே கடப்பார்கள். அவர்கள் பெற்றோரின் உறவை மதித்து பெற்றோரின் வழிகாட்டுதலை நாடுவார்கள். இதை மீறி  எதிர்மறையாக நடந்து கொள்ளும் பிள்ளைகளின் போராட்டமானது உண்மையிலேயே அவர்கள் சிந்திக்கும் திறனை வளர்க்கும் ஆரோக்கியமான வழி  என்பதை நாம் புரிந்து கொண்டால், அனாவசிய கவலைகளையும் கொந்தளிப்புகளையும் தவிர்க்கலாம்.
  • அதே நேரம் எல்லா டீன் ஏஜ் பிள்ளைகளும் ஓரளவுக்கு உணர்வு கொந்தளிப்பு இடர்பாடுகளை கடக்கவே நேரிடும்.  காரணம், அவர்களின் உடலிலும்  மூளையிலும் கோட்பாடுகளிலும் உண்டாகும் மாற்றங்கள்தான்  என்று தெளிவாக நாம் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்பட்டால் எளிதாகக்  கையாளலாம். இதை எல்லாம் மீறி நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் இருக்கவே இருக்கிறார் மனநல மருத்துவர்.
SHARE