ஏமாற்றமளித்துள்ள ஹுசைனின் கூற்று

271

நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில், இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள கருத்து மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

விசேடமாக அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அல்லது ஏதோவொரு அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை அண்மைக்காலத்தில் மேலோங்கியிருந்த நிலையில், தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கூறியதாக வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தானது மீண்டும் அனைத்து முயற்சிகளும் கானல் நீராகிப் போய் விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வந்துள்ள செயிட் அல் ஹுசைன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வட பகுதிக்கு விஜயம் செய்ததுடன் அங்கு வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அப்போது நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற விடயத்தை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் அதற்கு பதிலளித்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹுசைன் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதை சர்வதேசம் அங்கீகரிக்கவில்லை என்றும் நீதிமன்ற செயற்பாடுகளை துரிதப்படுத்துவதன் மூலமே விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வழக்கு விசாரணையூடாக முன்னெடுப்பதே பொருத்தமானது எனவும் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவதை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் செயிட் அல் ஹுசைன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் வருகை மூலம் தமது விடுதலைக்கான அழுத்தமும் தீர்வும் எட்டப்படும் என எதிர்பார்த்திருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அவரின் பதில் சாதகமற்றே அமைந்துள்ளது எனவும் வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அரசியல் கைதிகள் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்தானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

நாட்டில் 200 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முறையான விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்றி சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அடிக்கடி உண்ணாவிரத போராட்டங்களை நடத்துவதும் பின்னர் அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் அவர்கள் போராட்டங்களை கைவிடுவதும் வழமையாகியுள்ளன.

அந்தவகையில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

10 தினங்களையும் தாண்டிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் இறுதியில் அரசாங்க தரப்பினரதும் எதிர்க்கட்சித் தலைவரினதும் வாக்குறுதிகளையடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அத்துடன் சுமார் 30 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் பிணையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஏனையவர்களுக்கும் இவ்வாறு நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு பிணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுவந்தபோதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனும் இந்த கருத்தை வலியுறுத்தி வருகின்றார்.

அதாவது 12,000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்ய முடியுமாயின் மற்றும் 1989ம் ஆண்டு தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட முடியுமாயின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமக்கு ஏன் பொது மன்னிப்பு வழங்க முடியாது என்பதே அரசியல் கைதிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

குறிப்பாக தன்னை கொலை செய்ய வந்தவருக்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் ஏன் தமக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என்றும் அரசியல் கைதிகள் கேள்வியெழுப்புகின்றனர்.

தமிழ் அரசியல் தலைவர்களும் இந்த பொது மன்னிப்பு என்ற விடயத்தை வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் சர்வதேச சமூகமும் இவர்களின் விடுதலையை வலியுறுத்தி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில்கூட இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறானவர்களை கைது செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ரத்துச் செய்யவேண்டும் என்றும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவரின் விஜயத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர்.

குறிப்பாக காணாமல்போனோரது உறவினர்கள், அரசியல் தீர்வுக்காக ஏக்கத்துடன் இருப்போர் மற்றும் அரசியல் கைதிகள், என பல்வேறு தரப்பினர் தமது பிரச்சினைகளுக்கு அல் ஹுசைனின் விஜயத்தின் மூலம் விடிவு கிட்டுமென நம்பியுள்ளனர்.

விசேடமாக அரசியல் கைதிகள் தமது பொது மன்னிப்பு விவகாரத்தை செயிட் அல் ஹுசைன் கையில் எடுத்து அதற்கு உறுதியான தீர்வை வழங்குவார் என நம்பியிருக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே அரசியல் கைதிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்படும் வகையிலான கருத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டுமெனக் கோருவது நியாயமானதாகும்.

காரணம் ஆயுதமேந்தி போராடிய 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் விடுதலை வழங்க முடியுமாயின் தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்தாவது அவர்களை விடுதலை செய்ய முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் தயக்கம் காட்டி வருகின்றது.

ஒருவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடமிருந்து எவ்விதமான அழுத்தமும் வராது என்ற நம்பிக்கையில் தான் அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசட்டையாக இருந்து வருகின்றோ என்ற சந்தேகமும் தற்போது ஏற்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பளித்து அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டுமென்ற விடயத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அதற்கு நேர்மாறான கருத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் ஆணையாளரின் கூற்றை ஒரு காரணியாக வைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்தக்கூடாது என்பது வலியுறுத்தப்படவேண்டிய விடயமாக காணப்படுகின்றது.

விசேடமாக இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் துரிதகதியில் நீதிமன்ற நடவடிக்கைளை மேற்கொண்டு அவர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும்.

அதனை விடுத்து கைதுசெய்யப்பட்டு முறையான நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் அரசியல் செய்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இவர்கள் விடுதலை செய்யப்பட்டால் எங்கே இனவாத சக்திகள் இதனையொரு ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்து விடும் என்று அரசாங்கம் அஞ்சிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

மாறாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்தி அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு தீர்வைக் காண வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்.

SHARE