ஏமாற்றிய சங்கக்காரா! றொயல் லண்டன் கிண்ணத்தை கைப்பற்றிய வார்விக்‌ஷயர் அணி…

229

றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற வார்விக்‌ஷயர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வார்விக்‌ஷயர் மற்றும் சர்ரே அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சர்ரே அணி வார்விக்‌ஷயர் அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவரில் 136 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஜாசன் ரோய் (24), டேவிஸ் (23) நிலைக்கவில்லை. குமார் சங்கக்காரா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ரோய் பர்ன்ஸ் (40) மட்டும் ஓரளவு ஓட்டங்கள் எடுத்தார்.

வார்விக்‌ஷயர் அணி சார்பில், கிறிஸ் வோக்ஸ், அடிக் ஜாவிட், ஹனான்-டால்பை, ஜெட்டன் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 137 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வார்விக்‌ஷயர் அணிக்கு ட்ரோட் நல்ல தொடக்க கொடுத்தார். அவர் 100 பந்தில் 82 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்தவர்களும் ஓரளவு ஓட்டங்கள் எடுக்க வார்விக்‌ஷயர் அணி 2 விக்கெட் மட்டும் இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

SHARE