ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க தலைமையில் 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவென உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார். அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவே சந்திரிகா தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார். எதிர்வரும் காலங்களில் ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவே தேசிய சமரச அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்