ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அவசரப்படக்கூடாது என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உண்மை நீதிக்கான விசேட நிபுணர் பாப்லோ டி கிரிப் இதனை தெரிவித்துள்ளார் .
கடந்த 26 ஆம் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதிவரை இலங்கையில் விஜயத்தை மேற்கொண்ட அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் இடைக்கால மாறுதல் நடவடிக்கைகள் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இலங்கையை பொறுத்தவரையில் அவ்வாறான நடவடிக்கையை உடனடியாக எதிர்ப்பார்க்கமுடியாது என்று பாப்லோ குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாறுதல் நடவடிக்கைகளுக்கு கால வரையறையை நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறுகிய காலத்தில் இலங்கை அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நீதி தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தமுடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் காணிகளை திருப்பியளித்தல் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்திட்டங்கள் காணாமல் போனோரின் நிலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் மனோதத்துவ சமூக பணிகள் இவைகளில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.