இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான பொறிமுறை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான டி சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 26 ஆண்டுகாலம் நீடித்த உள்நாட்டுப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் நேற்று வியாழக்கிழமை (01.10.15) வாக்கெடுப்பின்றி ஏகமானதாக நிறைவேறியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சியைத் தவிர்ந்;த ஏனைய கட்சிகள் இந்த விடயம் குறித்து தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு கருத்து வெளியிட்டு வந்தன. அத்துடன் அண்மையில் வெளியான சிவில் சமூகத்தின் அறிக்கையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகள் கையொப்பம் இட்டிருந்தன.
இந்த நிலையில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தின் பொறிமுறை நியாயமாக செயற்படமுடியுமா என்பது குறித்து இன்னமும் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன எனத் தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், இருந்தாலும் இதை இப்போதைக்கு எதிர்க்கப்போவதில்லை எனவும், இந்த விசாரணை பொறிமுறை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிலவினாலும் தாமும் தமது கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.