இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து அந்நாட்டு அரசு மேற்கொண்டுவரும் விசாரணை நடவடிக்கைகளை ஆய்வு செய்யவுள்ளார்.
கொழும்பு விமான நிலையத்துக்கு நேற்று வந்த ஹுசைனை, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.
நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன், வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அவரது அமைச்சரவையினருடன் நேற்று சனிக்கிழமை பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படுகின்றன என அல் ஹுசைன் தெரிவித்தார் என ஹர்ஷா டி சில்வா கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து ஹுசைன் செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கை அதிபர் சிறிசேனவை சந்தித்துப் பேச இருப்பதாகவும், இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்குமென்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் 4 நாள்கள் தங்கியிருக்கும் ஹுசேன், யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு செல்கிறார். பின்னர் திங்கட்கிழமை அவர் திருகோணமலை மற்றும் கண்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்தப் பயணத்தின் போது, இலங்கை இராணுவத்தினரின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோரை ஹுசைன் சந்தித்துப் பேச இருக்கிறார். மேலும், அந்தந்தப் பகுதி அரசு அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
தனது பயணத்தின்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசவுள்ளதாக கொழும்பு சென்றடைந்தவுடன் அல் ஹுசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்புகளுக்கு பிறகு எதிர்வரும் ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களை சந்திக்கும் அவர் தனது பயணம் குறித்த கருத்துக்களை வெளியிடவுள்ளார் என அவரது அலுவலக அறிக்கை கூறுகிறது.
இதனிடையே, ஹுசைனின் வருகையைக் கண்டித்து கொழும்பில் சிங்களக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதேபோல், யாழ்ப்பாணத்துக்கு ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை வருகை தரும்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர் உரிமை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
முன்னதாக, இலங்கையில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் ஹுசைன் கடந்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகள், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சித்திரவதைகள், படுகொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து குற்றம் சாட்டியிருந்தார்.
இதேபோல், விடுதலைப் புலிகள் தங்கள் படையில் சிறார்களை சேர்த்தது, தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தியது, படுகொலைகளில் ஈடுபட்டது குறித்தும் அறிக்கையில் புகார் தெரிவித்திருந்தார்.
இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றம், மனித உரிமை மீறல்களில் இலங்கை இராணுவம் ஈடுபட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகளையும் இலங்கை அரசு ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது