ஒக். 02 இல் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்

212
முச்சக்கர வண்டி போக்குவரத்தில் உரிமையாளர்களும் சங்கங்களும் சிறப்பாக  செயலாற்றிவருகின்றபோதும் சில குறைபாடுகள் இருப்பது சம்மந்தமாக பொதுமக்கள், உரிமையாளர்களிடம் இருந்தும் அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக சங்கங்களின் நிருவாக சீரின்மை, பழைய புதிய நிருவாகங்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் ஒத்துழைக்காமை போன்ற பிரச்சனைகள் உரிமையாளர்களிடம் இருந்தும், கட்டணங்கள் மற்றும் சில சாரதிகளின் நடத்தை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
எனவே அவற்றை சீர்செய்யும் நோக்கோடு அமைச்சர் அவர்களால் மன்னார் மாவட்டத்தில்  குறித்த கூட்டம் ஒக்டோபர் 02ம் திகதி காலை 10 மணியளவில் மன்னார் கச்சேரி ஜெய்க்கா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூடத்தில் போக்குவரத்து சம்பந்தமான உயரதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதுடன் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன எனவே இக்கூட்டத்தில் அனைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சங்கங்கள் மற்றும் கிளைச்சங்கங்களின் நிருவாக உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொள்கின்றார்.
குறிப்பாக இக்கூட்டத்தில் நிருவாக சீரமைப்பு, சங்கங்களை பதிவுசெய்தல், தரிப்பிடங்கள் தொடர்பான பிரச்சனைகள் ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்படவுள்ளன. மேலும் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அனைத்து மாவட்ட சங்கங்கள் மற்றும் கிளைச்சங்கங்கள் அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும் எனவும் சேவைகளுக்கேற்றல்போல் அவற்றுக்கான யாப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், ஐந்து மாவட்ட சங்கங்களையும் ஒன்றிணைத்து வடமாகாண முச்சக்கரவண்டி உரிமையாளர் சம்மேளனம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், வருக்கின்ற வருடத்தில் இருந்து அதிகாரசபையிடம் சேவை அனுமதிப்பத்திரம் பெற்ற முச்சக்கரவண்டிகள் மாத்திரம் சேவையில் ஈடுபட முடியும் எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவிக்கின்றார்.
மேலும் பொதுமக்களுக்கு தரமானதும், பாதுகாப்பானதும், நியாயமான சேவையினை வழங்கும் பொருட்டு அனுமதி பத்திரம் பெற்ற முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான சீருடை, மீட்டர் பொருத்துதல் மற்றும் சாரதியின் பின்பக்க இருக்கையின் உயரம், பக்கவாட்டு கண்ணாடிகளின் நிலை, வேகக்கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்ததோடு, பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் இருபக்கமும் மூடக்கூடிய கதவுகளை கொண்டதாக இருக்க வேண்டும் எனவும், மாணவர்களை ஏற்றி இறக்கும்போது சாரதிகளே கதவுகளை திறந்து மூடுவதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொள்கின்றார்.
ஏனைய 04 மாவட்டங்களுக்குமான கூட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதுடன் அடுத்து கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான கூட்டம் நடத்துவதற்கு அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
unnamed
SHARE