வடக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தை மக்களுக்கு உகந்த பாதுகாப்பான போக்குவரத்தாக வழங்கும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின் கீழ், 60:40 என்ற அடிப்படையில் மக்கள் சேவையையும் இலாபத்தையும் கருத்திற்கொண்டு இணைந்த நேர அட்டவணை தயாரிக்கும் பணிகள் கடந்த வருடத்தில் இடம்பெற்றமை அனைவரும் அறிந்ததே, அதன் அடிப்படையில் வருகின்ற மாதம் அமுல்ப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகளுக்கான இணைந்த நேர அட்டவணைகள் இறுதிக்கட்ட திருத்தம் மேற்கொண்டு முடிவுகள் எடுப்பதற்காக 22-01-2016 வெள்ளி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும், ஐந்து மாவட்டங்களினதும் பிரதம கணக்காளர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வடக்கு முகாமையாளர், வடக்கு தனியார் பேரூந்து சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்லும் வளித்தடத்துக்கான இணைந்த நேர அட்டவணையும், ஏ 32 வீதியில் பயணிக்கும் பேரூந்துகளுக்கான இணைந்த நேர அட்டவணைகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனைய மாவட்டங்களுக்கான இணைந்த நேர அட்டவணை மிக விரைவாக சீர்செய்யப்பட்டு அமுல்படுத்த படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் இணைந்த நேர அட்டவணையை இரண்டு தரப்பினரும் இலாபத்தை மாத்திரம் நோக்காது, மக்களுக்கு சரியான முறையிலும், சிறந்த போக்குவரத்தையும் வழங்கும் உயரிய நோக்கோடும் செயற்ப்படவேண்டும் என்றும், அமுலக்கப்பட்டபின்னர் இவ் இணைந்த நேர அட்டவணையை மீறும் இரண்டு தரப்பினருக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தனது கருத்தை தெரிவித்தார்.