ஒற்றுமையீனங்களால் சிதையும் தமிழர் பலம்!

288

தேசிய இனப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் அதற்கு ஒரு தீர்வை காணமுடியாது இருப்பதற்கும் பிரதான காரணம் தமிழ் தலைமைத்துவங்களிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் பதவி பேராசைகளும் குரோத எண்ணங்களுமேயாகும்.

தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில் தமிழ் மக்கள் என்றுமில்லாத வகையில் பாரிய இழப்புக்களை சந்தித்து, இன்றும் அதிலிருந்து மீள முடியாதவர்களாக துன்பப்பட்டிருக்கும் நிலையிலும் கூட, தமிழ் மக்களை அடகு வைத்து வியாபாரம் செய்யும் ஒருசில தமிழ் தலைமைத்துவங்களின் போக்கில் எந்தவிதமான மாற்றத்தையும் காணமுடியாத நிலைமைகளே இருந்து வருவதாக தமிழ்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தேசிய இனப்பிரச்சினை ஆயுத மோதலாக உருவெடுத்து சுமார் மூன்று தசாப்த காலம் இந்த நாட்டில் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதோடு மாத்திரமன்றி இனப்பிரச்சினைக்கு சாதகமான தீர்வை காணக்கூடிய பல்வேறு சந்தர்ப்பங்களையும் உருவாக்கியது.

இருந்தபோதிலும், தமிழ் மக்களின் சாபக்கேடோ என்று எண்ணும் அளவுக்கு அவை யாவும் சறுக்கிச் சென்றதுடன் ஆயுதப் போராட்டமும் மௌனித்தது. இதன் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபகரமாக உயிரிழக்க நேரிட்டதுடன் இன்றும் யுத்த வடுக்களை தாங்கியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவையனைத்துக்குமான மூல காரணம் தமிழ் அரசியல்வாதிகளிடமும் சரி, தமிழ் மக்களிடமும் சரி காணப்படும் ஒற்றுமையீனங்களும் குரோத எண்ணங்களுமே ஆகும்.

ஒருவகையில், “தனக்கு மூக்கு போனாலும் பராவாயில்லை, எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் “என்ற ஒரே நோக்குடனேயே தமிழ் அரசியல்வாதிகள் பலரும் இன்றும் செயற்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரியதும் வேதனைக்குரியதுமாகும்.

மறுபுறம் தமிழ் மக்களின் துயரங்களில் அவர்களுக்கு எந்தவித கவலையும் கிடையாது. எப்படியாவது தமது அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறியாக இருந்து வருவது புலனாவதாக தமிழ் மக்கள் பலரும் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களை ஒருதடவை திரும்பிப் பார்த்தால் நாட்டில் இராணுவப் பலப் பிரயோகங்களினால் இழந்த உயிர்களை விடவும் தமிழ் குழுக்களினாலும் அரசியல் பேதங்களினாலும் இழந்த உயிர்களின் எண்ணிக்கையே அதிகமெனக் கூறலாம்.

தமிழ் தலைமைத்துவங்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றுக்கொன்று குழி பறிக்காமல் செயற்பட்டிருந்தால் தமிழ் அரசியல் பலம் மேலோங்கி இருப்பது மாத்திரமன்றி, தேசிய இனப்பிரச்சினைக்கும் காத்திரமானதோர் பலன் கிட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது என்பதே பொதுவானதொரு அபிப்பிராயமாகும்.

இதேவேளை, தமிழ் மக்கள் ஒன்றிணைந்த சக்தியாக இந்த நாட்டில் விளங்கக்கூடாது, அவர்களின் பலம் சிதைவுற வேண்டும் என்பதில் அவ்வப்போது பதவிக்கு வரும் அரசியல் சக்திகளும் குறியாகவே இருந்து வருகின்றன.

அதற்கு முட்டுக்கொடுப்பது போல தமிழ் மக்கள் தரப்பிலும் சில சக்திகள் செயற்படுவது மிகவும் துரதிஷ்டவசமாகும். இந்தவிதமான நிலைமைகள் நீடிக்கும் பட்சத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எவ்வாறெனினும், பிறக்கப் போகும் புதிய வருடத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியும் உறுதியுமான தீர்வு கிடைக்குமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலம்வாய்ந்த சக்தியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்து விளக்கியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதுடன், அதன் பின்னணியில் பல்வேறு அரப்பணிப்புக்களை மேற்கொண்டது என்ற வகையில் தமிழ் மக்களின் மிகுந்த ஆதரவு பெற்ற கட்சியாக அது விளங்கி வருகின்றது.

தமிழ் மக்களின் பலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே அது உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் அதிக கவனத்தை கவர்ந்த ஒன்றாக விளங்கும் என்பது சர்வசாதாரணமான விடயமாகும். மாறாக, குறித்த கட்சி பலமிழக்குமானாலோ? அன்றேல் பிளவடையுமானாலோ? அதன் ஒட்டுமொத்த தாக்கமும் தமிழ் மக்களையே சார்ந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன் கடந்த தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சிலர், கட்சியை கடுமையாக விமர்சித்து வருவதுடன் அதனை பலவீனப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இது மறுபுறம் தமிழ் மக்களின் பலத்தை சிதைவடையச் செய்ய வேண்டும் என்ற பேரினவாத சக்திகளுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் வடக்கில் அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு தொடர்பிலும் பலதரப்பட்ட கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் நோக்கம் அரசியல் சார்ந்ததல்ல என்று கூறப்படுகின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பால் அதிருப்தி கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து இத்தகைய அமைப்பை அமைத்துள்ளார்களா? என்ற சந்தேகத்தை தமிழ் மக்கள் எழுப்புகின்றனர்.

எவ்வாறெனினும், கூட்டமைப்பின் மூலக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி, அதன் இதர கட்சிகளை அரவணைத்துப் போகும் தன்மையை கொண்டிராத போக்குகளும் எதேச்சாதிகாரமான முடிவுகளுமே புதிய அமைப்பின் தோற்றப்பாட்டுக்கு பிரதான காரணமெனக் கூறப்படுகின்றது.

தமிழ் மக்கள் பேரவையின் உண்மையான நோக்கம் எதுவாக இருப்பினும் இன்று தமிழ் மக்கள் மத்தியிலும் குறிப்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியிலும், இது பேசுபொருளாக மாறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கூட்டமைப்பை குறி வைத்தே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்தாக மாறியுள்ளது.

மறுபுறம், சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு இது சிறந்த களமாக அமைந்துவிட்டது என்பது தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும். இன்றைய சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி வடக்கு, கிழக்கில் புதிய அரசியல் கட்சியொன்று உருவாகும் சூழல் இல்லையென்பதை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருமே நன்கு உணர்ந்துள்ளனர்.

இருந்தபோதிலும், ஏதோவொரு வகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் புதியதோர் செயற்பாடு உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.

விசேடமாக, குறித்த கட்சியின் தோற்றம் தொடர்பிலான விமர்சனங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருவேறு அணிகளுக்கு வழிவகுப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் பலத்தை சவால்மிக்கதொன்றாக மாற்றும் என்பதையம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடியான சூழ்நிலையை சரியான வகையில் கையாள வேண்டியது இன்றியமையாததாகும். இன்றேல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் அதன் பிரதான இலக்கு பாதிக்கப்படுவதாகவே அமையும் என்பதில் எந்தவித சந்தே கமும் இல்லை.

கடந்த காலங்களில் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கக் கிட்டிய சாதகமான பல சந்தர்ப்பங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தவற விட்டதாலேயே இத்தகைய பாரிய இழப்புக்க ளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என இன்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தோன்றியுள்ள சாதகமான சூழ்நிலையை சீர்குலைக்க எத்தரப் பினரும் முயன்று அதன் வரலாற்று ரீதியான பழிக்கு காரண மாகி விடக்கூடாது என்பதை நிதானமாக எடுத்துக்கூற விரும்புகின்றோம்.

SHARE