இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பேச்சாளர் லக்ஸான் சொய்சா தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளுக்குமான வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் 16 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கான அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு ஆகியனவற்றின் கட்டணங்கள் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து நாடுகளுக்குமான சாதாரண சேவை கடவுச் சீட்டு கட்டணம் 2500 ரூபாவிலிருந்து 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருநாள் சேவையில கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 7500 ரூபாவிலிருந்து 10000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
16 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியருக்கான அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு கட்டணம் 1500 ரூபாவிலிருந்து 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் பிரதான குடியிருப்பாளரின் கட்டணம் 250,000 ரூபாவிலிருந்து 300,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், ஏனைய உறுப்பினர்களுக்கான கட்டணம் தலா 50,000 ரூபா என்ற தொகையில் மாற்றமில்லை என பேச்சாளர் லக்ஸான் சொய்சா கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.