கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற தனது மகனை தேடியலையும் தாய்….

225

மத்திய கிழக்கிலுள்ள கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற தனது மகன் பேரானந்தம் செந்தூரன் (வயது 22) கடந்த ஆறு மாதங்களாக தொடர்பற்ற நிலையில் காணாமல் போயிருப்பதாக அவரது தாய் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்.

இது குறித்து மட்டக்களப்பு புதுநகர், எல்லை வீதி, முதலாம் குறுக்கைச் சேர்ந்த கட்டாரில் காணாமல் போனதாகக் கூறப்படும் செந்தூரனின் தாய் ஜமுனா (வயது 54) குறிப்பிடுகையில்,

எனது மகன் அவரது நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற விசாவினூடாக கடந்த 2014.01.01 திகதி காய்ச்சி ஒட்டுநர்(welding) தொழில் வாய்ப்புப் பெற்று கட்டார் நாடு சென்றார்.

அன்றிலிருந்து கடந்த 30.10.2015 வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். அவ்வப்போது பணமும் அனுப்பினார்.

ஆனால், அங்கு ஒழுங்காக சம்பளம் வழங்கப்படுவதில்லை, பல மாதங்களுக்குப் பின்னரே சம்பளம் தருகிறார்கள் என்றும் இதனால் செலவுக்குக் கூட சிரமமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

கடைசியாக எனது வங்கிக் கணக்குக்கு கடந்த 18.07.2015 அன்று 17800 ரூபாய் அவரது சம்பளப் பணத்தை அனுப்பியிருந்தார்.

எனது மகன் முறைப்படி வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கூடாவே பதிவு செய்து கட்டார் சென்றிருந்தார்.

ஒரேயொரு ஆண் பிள்ளையான அவரை குடும்ப பொருளாதாரக் கஷ்டத்தின் காரணமாகவே வெளிநாடு அனுப்பினோம். எனது கணவரும் நோய் வாய்ப்பட்டவர்.

தற்சமயம் எனது மகனது தொடர்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து நான் எனது பிள்ளையை இழந்து கலங்கிப் போய் நிற்கின்றேன்.

காணாமல்போன எனது மகனின் சகோதரிகள் இருவரும் கல்வியைத் தொடர முடியாத கவலையிலும் வறுமையிலும் கண்ணீரோடு காலங் கழிக்கின்றார்கள்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் காணாமல் போன எனது மகனை மீட்டுத் தருமாறு உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார். (எனது தொடர்பு இலக்கம் 0652053846)

இதேவேளை, இந்த முறைப்பாடு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனத்திற்கு எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலக அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.mother-son

mother-son01

SHARE