கண்டி பிரதேசத்தில் நடாத்தப்பட்ட உளநல விருத்திக்கான வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேகநபரான கண்டி வர்த்தகர் நிமல் பீரிஸை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான மஜிஸ்ட்ரேட் புத்திக ஸ்ரீ ராகல நேற்று (11) உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பிரதானியான சந்திமால் கமகே உடன் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு பெண்களையும் எதிர்வரும் 22 வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தவுடன் மயக்கமுற்ற நிமல் பீரிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்குதாரர்களான பிள்ளைகள் சார்பில் 11 சட்டத்தரணிகள் சுயேட்சையாக ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சந்திமால் கமகே கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபருக்கு அரசியல்வாதிகளினதும் உயர் மட்ட அதிகாரிகளினதும் உதவி கிடைக்கவிருப்பதனால் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தாம் ஆஜராகியுள்ளதாக மாணவிகள் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.