கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பு !
கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பிரதமர் 28 அமைச்சர்களையும், 10 நாடாளுமன்றச் செயலாளர்களையும் நியமித்துள்ளார்.
இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி, 2015 ஒக்டோபர் 19 அன்று நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக நாடாளுமன்றம் சென்றார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் கனடிய முடியரசு – பழங்குடிகள் உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராகவும், அண்மையில் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளதாக அறியப்படுகிறது. மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் செயற்பாடுகளிலும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார்.
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஹரி ஆனந்தசங்கரி,
“கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு முன்னர் இந்தப் பொறுப்பிலிருந்த மார்கோ மென்டிசினோ (Marco Mendicino) ஆற்றிய சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை, எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாக்கும் பாதுகாப்பு அமைப்புக்களைப் பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன்.”
“முன்னர் நான் வகித்த கனடிய முடியரசு – பழங்குடிகள் உறவுகள் (Crown-Indigenous Relations) மற்றும் நீதி (Justice) அமைச்சுக்களில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதங்கொண்டுள்ளேன். பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும் மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி, மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்பியுள்ளோம்.”
“இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்த வேளையில், பிரதமர் மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன். கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் கட்டுறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும் அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவிருக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.