இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவான் 1 ஓட்டம் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக கவுதம் கம்பீர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவானுக்கு இடம் கிடைத்தது. ஆனால் தவான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய்யும் 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா 28 ஓட்டங்களுக்கே 2 விக்கெட்டை பறிகொடுத்தது.
தற்போது அணித்தலைவர் விராட் கோஹ்லி, புஜாரா ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர். 2 விக்கெட்டையும் நியூசிலாந்தின் ஹென்றி தான் வீழ்த்தியுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால், இந்தப் போட்டியை இந்திய அணியும், ரசிகர்களும் முக்கியமானதாக பார்க்கின்றனர்.