
மாதவிலக்கு தள்ளிப்போதல் : கர்ப்பத்தின் அடையாளம் இது. மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவாலும் இப்படி நேரிடலாம். அடுத்த விலக்குவரும் வரை பொறுத்திருந்து கர்ப்பமானதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பிரசவ காலம் : கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து கர்ப்ப காலம் கணக்கிடப் படுகிறது. சரியான பிரசவ காலத்தை தெரிந்துக் கொள்ள, கடைசியாக உங்களுக்கு மாதவிலக்கு எப்போது ஆனது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இரத்த சோகை : கருக் காலத்தில் குழந்தை ஒட்சிசன், ஊட்டம் போன்றவை தாயின் இரத்திலிருந்தே அனுப்பப்படுகிறது. எனவே தாய்க்கு கூடுதலான இரத்த உற்பத்தி இருக்க வேண்டும். பழங்கள், கீரைகள் போன்றவற்றை நிறைய சாப்பிட்டால் இரத்த உற்பத்தியும் ஊட்டமும் கிடைக்கும். இல்லா விட்டால் இரத்த சோகை ஏற்படும். இது கர்ப்பிணிக்கு மட்டுமின்றி கருவுக்கும் ஆபத்தை தரும். இரும்புச்சத்து, பாலிக் அமில மாத்திரைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
கால்சியம் : குழந்தையின் எலும்பு, பல் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து தேவை, பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
வலிகள் : கருப்பை வளர்த்து முன்னே தள்ளும்போது உடல் சமநிலையை இழந்து தடுமாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் கருப்பை வளர்ச்சியால் அழுத்தப்படுவதால் கால்கள் வலிக்கும், வாசனைகளை முகர்ந்தால் ஒத்துக்கொள்ளாமல் அவ்வப்போது தலைவலி போன்றவை வரக்கூடும்.

மூச்சு திணறல்: கரு வளர்ச்சியடையும் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்து வதால் நுரையீரல் முழுமையாக விரிவடைய இயலாது. இதனால் ஆழ்ந்து சுவாசிக்க இயலாமல் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் சாதாரணம்.

மலச்சிக்கல், மூலநோய் : ஜீரண மண்டலம் மெதுவாகச் செயற்படுவதாலும், ஹார்மோன் மாற்றத்தால் குடல் விரிவடைதாலும் குடலுக்கு உணவுப் பொருட்கள் தள்ளப்படுவரில் தாமதம் ஏற்படும், நீர்ச்சத்துக்களை குடல் உறிஞ்சி விடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இது தொடர்ந்தால் மூலநோய் வரும். கருப்பை இடுப்புக் கூட்டை அழுத்துவதாலும் ஆசன வாயின் சிரை நாளங்கள் வெளி நோக்கித் தள்ளப்பட்டு மூலக் கட்டிகள் தோன்றும். இந்தப் பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்றாலும் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கண்களில் மாற்றம் : திடீர் திடீரென இரத்த அழுத்தம் உயர்வது, குறைவது இயல்பு. ரத்த அழுத்தம் உயர்வதால் கண்களில் ஏதோ திரை விழுந்ததைப் போன்று இருக்கும். பார்வை மங்கலாகும். இதற்குப் பயப்பட வேண்டியதில்லை. பிரசவத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
ஈறுகளில் அழற்சி : கர்ப்பத்தின்போது ஈறுகள் மென்மையடைவதால் ஈறுகளில் அழற்சி தோன்றுவது இயல்பு. கடினமான பொருட்களைக் கடிக்காதீர்கள். பல் பாதுகாப்பில் கவனம் செலுத்தங்கள்.
தடையற்ற சிறுநீர் : கர்ப்பத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் அதிர்ந்து சிரித்தாலோ அல்லது பேசினாலோ சிறுநீர் தானாகப் பிரியும். பத்தாம் மாதவாக்கில் இப்படி சிறு நீர்க்கசிவு தொடர்ந்து இருந்தால் பனிக்குடம் உடைந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே மருத்துவரை பார்க்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தைக்கு ஆபத்து.

நமைச்சல் : கர்ப்பக் காலத்தில் வயிற்றுப் பகுதியில் வரிக்கோடுகள் தோன்றுவதால் நமைச்சலெடுக்கும். உடல் முழுவதும் நமைச்சலெடுத்தால் கல்லீரல் பாதிப் பிருக்கலாம். இந்த பிரச்சினை அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது.
மூட்டுகள் : கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவதால் தசைநார்கள் தளர்ந்து மென்மையடைந்து விடும். இதனால் உடலிலுள்ள மூட்டுகளில் வலி ஏற்படும். ஓய்வு எடுப்பது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையும் தேவை.
பாலுறவுசிந்தனைகள் : ஹார்மோனின் ஏற்ற இற்றங்களால் பாலுறவு அதிகரிப்பதும், குறைவதும் கர்ப்பக் காலத்தில் இயல்பு.
மனநிலையில்மாற்றம் : தாய்மையை நினைத்து சந்தோஷப்பட்டாலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள், பிரசவத்தைப் பற்றி பயம் ஆகியவற்றால் திடீரென பயம், கவலை போன்ற மனமாற்றங்கள் வரலாம். அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும். கருக்காலத்தில் அதிகமாக வீடு மற்றும் வெளி வேலை செய்வதால் எரிச்சல், கோபம், சோர்வு போன்றவை ஏற்பட்டு அதன் காரணமாக மன நிலையில் மாறுதல் வரலாம்.
நீர்கோர்த்தல் : கர்ப்ப காலத்தில் உடலில் நீர்கோர்த்தல், பனிக் குடத்தில் நீர் சேருதல் இயல்பு. இதனால் கை, கால்களில் வீக்கம் வருவதும் இயல்பு. பயப்பட வேண்டாம். நடை பயிற்சி செய்யுங்கள்; ஓய்வெடுங்கள்.
இதயத் துடிப்பு : கர்ப்ப காலத்தில் இதயம் மிக அதிகமாகத் தூண்டப்படுவதால் படபடப்பு அதிகமாகும். பயம் வேண்டாம். சருமம் : சருமத்தில் வரிக்கோடுகள் தோன்றும். இளமையான சருமம் இப்போது மாறத் தொடங்கும். இது இயல்பு. பெரும்பாலானவை மறைந்து விடும், சில கோடுகள் இறுதிவரை நீடித்திருக்கும்.
எடை அதிகரிப்பு : கர்ப்ப காலத்தில் 12 கிலோவரை எடை அதிகரிக்கும். இதில் குழந்தையின் எடை, நஞ்சு, தொப்புள்கொடி போன்றவற்றின் எடை, கொழுப்பு போன்றவை அடங்கும்.
கரு நெளிதல் : 18 20 வாரங்களில் முதன் முறையாக கரு நெளிதல் ஏற்படும். குழந்தையின் உதைப்பு வலித்தாலும், இன்பம் தரக்கூடியது. இந்த உதைப்பு குறைந்து விட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
வேலை, ஓய்வு : கர்ப்பக் காலம் முதல் பிரசவத்திற்குத் தயாராவது என வேலை செய்வதில் தவறில்லை. ஆனால் போதுமான ஓய்வு தேவை, அலைச்சல் இருக்கக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே மருந்து மாத்திரை பயன்படுத்த வேண்டியிருந்தால் டாக்டரைக் கேட்டு அதன்படி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை உருவாகும் போதே குறைபாடுகள் தோன்றலாம்.
பிரசவம் : பிரசவிக்கும் போது வலி இருக்கத்தான் செய்யும். இந்த வலி பத்து நிமிடங்கள் அல்லது அதிகமாகக் கூட இருக்கலாம். குழந்தை பிறப்பதற்கு வசதியாக அமைந்திருந்தால் சாதாரணமாகப் பிறந்துவிடும். இல்லாவிட்டால் சிசேரியன் நடக்கலாம்.