கலைத்துறையின் முன்னேற்றம் குறித்து கலைஞர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை

206

கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கலைஞர்களுக்குமிடையில் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

சினிமா, தொலைக்காட்சி, அரங்கியல் மற்றும் இசைக் கலைஞர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். சினிமா, தொலைக்காட்சி நாடகம் மற்றும் இலக்கியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலைஞர்கள் ஜனாதிபதிக்கு விளக்கியதுடன், தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும், ஒரு சில முன்மொழிவுகள் தொடர்பில் மேலும் தகவலை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகளை எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கவுள்ளதாக ஜனாதிபதி கலைஞர்களிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு மத்தியில் தேசிய தொலைக்காட்சி நாடகங்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கை கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காக தொலைக்காட்சியினூடாக முறையான நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

கலைஞர்கள் மன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தல், திரையரங்குகளின் பற்றாக்குறை, விநியோக முறைமையில் உள்ள குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளை தீர்க்கவேண்டியதன் அவசியத்தையும் கலைஞர்கள் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினர்.

இசைத்துறையின் முன்னேற்றத்திற்கு எடுக்கப்படவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய தலைமுறையினர் ரியலிடி நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் செல்வதன் காரணமாக சுய படைப்புகள் உருவாகாமை போன்ற பிரச்சினைகளை இசைக் கலைஞர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

15.10.2016

president_maithripala_sirisena

SHARE