‘புதிய ஆட்சியில் புதிய புலனாய்வாளர்கள்’ இவர்கள் மத்தியில் தான் எம் போராட்டம் நடைபெறுகிறது ஒரு அரசியல் கைதியை மட்டும் விடுவித்து விட்டு சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளையாக தனது முகத்தை காட்டி வருகின்றது இந்த புதிய அரசாங்கம் இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இன்று யாழ்.பேருந்து நிலையத்தில் யாழ்.வருகை தரவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் யாழ். வருகை தரும் ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் தினத்தை சிறப்பிக்கவுள்ளனர். ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை வீதிகளில் கண்ணீரால் தேடியலையும் பெற்றோர்கள் பிரச்சினைகள் தீரவில்லை. அதுமட்டுமல்ல ஒரு அரசியல் கைதியை மட்டும் விடுவித்து விட்டு சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளையாக இந்த அரசாங்கம் தனது முகத்தை காட்டி வரும் அதேவேளை தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.