காணாமல்போனவர்கள் பற்றி பேசினால், ஜனாதிபதி ஆணைக்குழு அபிவிருத்தி தொடர்பாகவே பேசுகிறார்கள்: சசிகுமார் ரஞ்சினிதேவி

325
முல்லைத்தீவு முத்தயன் பகுதியில் வசித்து வரும் திருமதி. சசிகுமார் ரஞ்சினிதேவி, தனது கணவர், கணவரின் சகோதரன் மற்றும் இரண்டு உடன்பிறப்பு சகோதரரை இறதியுத்தத்தில் பறிகொடுத்து பரிதாபகரமான நிலையில் பல்வேறு கஸ்டங்கள் மற்றும் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் மத்தியில் வாழ்ந்து வருகிறார்.

அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி எனது கணவர், கணவரின் சகோதரன் மற்றும் இரண்டு உடன்பிறப்பு சகோதரரும் முல்லைத்தீவு வட்டுவால் பகுதியில் இருந்து இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு சென்றபோது சரணடைய இராணுவம் கேட்டுகொண்டதிற்கு இணங்க, எனது கணவர் உட்பட நான்குபேரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தர்.

இதன்போது எனது கணவர் உட்பட உறவினர்கள் நான்கு பேரையும் பஸ்சில் ஏற்றியதுடன், எங்களை வேறு பஸ்சில் ஏற்றி முகாமிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

எனது கணவரையும் சகோதரர்களையும் விசாரித்து விடுவதாக இராணுவம் கேட்டுகொண்டதிற்கு இணங்க விசாரணையின் பின் அவர்களை முகாமிற்கு கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்து வந்தோம். ஆனால் நாங்கள் முகாமிற்கு வந்து நெடுநாள் ஆகியும் அவர்கள் வரவில்லை.

ஆனால் நாங்கள் முகாமிற்கு வந்தபின் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், மனித உரிமைகள் அமைப்புகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, காணமல்போனோர்களின் சங்கம் உட்பட அனைத்து மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளிடம் எனது விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

அதைவிட மீள்குடியேற்றபட்ட பின்பும் எங்க எங்கே எல்லாம் காணாமல் போனோர் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளபடுகிறதோ அங்கெல்லாம் சென்று பதிவுகளை மேற்கொண்டதுடன், விசாரனைக்கென எங்கெல்லாம் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று வந்தும் எதுவித பயனும் இல்லை.

அதைவிடவும் ஜனாதிபதி ஆணைக்குழு வந்து எங்களிடம் விபரங்கள் கேட்டபோது, நாங்கள் நம்பிக்கையுடன் அங்கு சென்று வாக்மூலத்தை பதிவு செய்ததுடன்,

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவால் எங்களுக்கு நல்ல முடிவு வரும் எனது கணவர் மற்றும் சகோதரர்களை மீட்டுத்தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பலத்த எதிர்பார்ப்புகளுடன் அங்கு சென்றபோது அங்கு எங்களுக்கு சாதகமான எந்தஒரு பதிலையும் ஜனாதிபதி ஆணைக்குழு தரவில்லை

ஆனால் மாறாக உங்களுக்கு விட்டுத்திட்டம் தந்ததோ? வாழ்வாதாரம் கடைக்கிறதோ? 25 000 காசு தந்ததோ? இவ்வாறுதான் கேட்கிறார்களே தவிர, கணவர் எவ்வாறு நாணாமல்போனார், கணவரை தேடி தருவோம் என்ற உறுதியாக தெரிவிக்க அவர்களால் முடியாது உள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு பொலிசார் எமது வீட்டிற்கு வந்து விசாரித்தார்கள், எனது சகோதரனின் தகவல் இருப்பதாக தெரிவித்தார்கள் என்று சொல்லியும் அவர்கள் அதை கருத்தில் கொள்வதாக இல்லை, மாறாக அபிவிருத்தி தொடர்பாகவே எங்களிடம் கேட்கிறார்கள்.

ஆகவே இப்படிபட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் எங்களுக்கு நம்பிக்கையில்லை, ஜனாதிபதி ஆணைக்குழு தேவையற்ற ஒன்றாகவே நாம் கருதுகிறோம்.

ஆனால் தற்பொது மீண்டும் புதிய ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக புதிய பிரதிநிதிகளை தெரிவுசெய்து அதன் மூலம் தகவல்களை பெற்றுவருகிறார்கள் அதுவும் சாத்தியமற்ற ஒன்றாகவே நாம் கருதுகிறோம்.

ஆகவே ஜனாதிபதி ஆணைக்குழுவில் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவே சர்வதேச தலையீடு மூலமே எங்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுகொள்ளமுடியும்.

எனவே சர்வதேசம் இவ்விடயத்தில் தலையிட்டு காணாமல்போன உமது உறவுகளை கண்டுபிடித்து தரவேண்டும், எங்களுக்கு வாழ்வாதாரமோ, அல்லது அபிவிருத்தியோ தேலையில்லை.

என்னைப்போல் எத்தனையோ பேர் சரணடைந்த கணவர் மற்றும் உறவினர்களை கையை பிடித்துகொண்டுபோய் ஒப்படைத்தவர்கள் இருக்கிறார்கள், வீடுகளுக்கு வந்து பிடித்துகொண்டு போனவர்கள் இருக்கிறார்கள்.

மேலும் காணாமல்போன உறவினர்கள் இருக்கின்றார்கள் என்ற தகவல் கடைத்தும் இந்தா காட்டுகிறோம், அந்தா காட்டுகிறோம் என்கின்ற சம்பவங்களை எல்லாம் நாங்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்.

இந்த நல்லாட்சி என்ற காலப்பகுதியிலும் புலனாய்வு துறையினரின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அது மட்டுமன்றி ஏற்கனவே சிறைகளில் இருந்து வந்தவர்களுக்கும் மீண்டும் மீண்டும் விசாரணைகள் நடைபெறுகிறது,

மீண்டும் பிடித்து செல்கிறார்கள், தடுப்பிற்கு போகாதவர்கள் என்று சொல்லி பிடித்து கொண்டுபோகிறார்கள், அது மட்டுமன்றி மறைமுகமாகவும் பல விடயங்கள் இங்கு நடைபெற்று வருகிறது.

எனவே சர்வதேச விசாரணையே எமக்கு தேவையான ஒன்றாக உள்ளது. எனவே எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றார்.

SHARE