காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

331

 

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், தமது பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமாறு பரணகம குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. எனினும், ஜனாதிபதியிடமிருந்து இன்றைய தினம் சாதகமான பதில் கிடைக்கும் என தாம் நம்புவதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார். தான் நியமிக்கும் ஆணைக்குழுவொன்றின் பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அதை கலைப்பதா என்பது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கிறது.

 

அந்தவகையில், பரணகம குழுவுக்கு அவர் பதவி நீடிப்பு வழங்கமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு கலைக்கப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்கூட கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பரணகம ஆணைக்குழு கலைக்கப்பட்ட பின்னர் அதற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் காணாமல்போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள பணியகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு வகுத்துள்ள நான்கு திட்டங்களில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தனி பணியகமொன்று அமைக்கப்படும் என்ற உறுதிமொழியும் இருக்கிறது.

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தமது ஆட்சியின்போது ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றை மஹிந்த ராஜபக்ஷ அமைத்திருந்தார். இந்த விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் அதன் விடயப்பரப்பை மஹிந்த விஸ்தரித்ததுடன், அனைத்துலக சட்டதிட்டம் தொடர்பில் பரணகம குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன் டி சில்வா தலைமையில் அறுவடரங்கிய ஆலோசனைக்குழுவொன்றையும் அமைத்திருந்தார். ஆட்சிமாற்றத்தின் பின்னரும் பரணகம குழுவுக்கு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் வழங்கினார். அந்தவகையில் விசாரணைகளை முன்னெடுத்த பரணகம ஆணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பிலான தமது இறுதி விசாரணை அறிக்கையை கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் கையளித்தது.

எனினும், காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. அண்மையில்கூட யாழில் பொது அமர்வு நடத்தப்பட்டது. அதன்பின்னர் அடுத்த அமர்வை எங்கு நடத்துவது என்பதுபற்றி முடிவெடுக்கப்படவில்லை. அடுத்தகட்ட நவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக பரணகம ஆணைக்குழு காத்திருந்தது. ஆனால், இன்று பதவிக்காலம் முடிவடைகிறது. ஜனாதிபதியிடமிருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியிடமிருந்து பதவி நீடிப்பு உத்தரவு கிடைத்தால் தனது அடுத்தகட்ட அமர்வை எதிர்வரும் வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பரணகம குழு தயாராகவே இருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

SHARE