‘காதல்’ சந்தியா பொறியாளருடன்….!

331

‘காதல்’ திரைப்பட நாயகி சந்தியாவின் திருமணம் குருவாயூரில் எளிமையாக நடைபெற்றது.

‘காதல்’ திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சந்தியா. அதன்பின் நடிகர் ஜீவாவுடன் ‘டிஷ்யூம்’ படத்திலும் கதாநாயகியாக நடித்ததுடன் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை சந்தியா சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஐ.டி. பொறியாளர் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களது திருமணம் நேற்று சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக சந்தியா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பும் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் அவர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருமணத்தை சென்னைக்கு பதில் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடத்த சந்தியாவின் பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் பேசி முடிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மழை ஓய்ந்து நிலைமை சற்று சீரடைந்ததும் சந்தியாவின் குடும்பத்தினரும், மணமகன் வெங்கட் சந்திரசேகரன் குடும்பத்தினரும் காரில் குருவாயூர் புறப்பட்டு சென்றனர். ஆனால், அவர்களது கார் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதன்பின் அவர்கள் ஒரு தனியார் பேருந்தில் குருவாயூர் சென்றனர்.

இதை தொடர்ந்து நேற்று காலை குருவாயூர் கோவிலில் சந்தியா-வெங்கட் சந்திரசேகரன் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும், திருமணம் குறித்து சந்தியாவின் பெற்றோர் கூறும்போது, ”மழையால் சந்தியா திருமணத்தை சென்னையில் நடத்த முடியாமல் போய்விட்டது. அதனால் குருவாயூர் கோவிலில் திருமணத்தை நடத்தினோம். நாங்கள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

தற்போது மழை வெள்ளம் காரணமாக எளிய முறையில் திருமணத்தை நடத்தி உள்ளோம். திருமண செலவுக்காக திட்டமிட்டு இருந்த தொகையை சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண உதவிக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், மழை குறைந்ததும் வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளோம்” என்றனர்.sateja

SHARE