காய்ச்சலை தணிக்க கூடியதும், இளைநரையை போக்கவல்லதும், பித்த சமனியாக விளங்குவதும், உடல் உஷ்ணத்தை போக்க கூடியதும், உள்ளங்கை, கால் எரிச்சலை சரிசெய்யும் தன்மை உடையதும், நோய் எதிர்ப்பு சக்தி என பல பயன்களை கொண்டது அகத்தி கீரை. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. மலச்சிக்கலை போக்கும். காய்ச்சலை தணிக்கும் தன்மை கொண்டது. அகத்தி பூக்கள் வெண்மை நிறம் கொண்டவை. கார்த்திகை முதல் மாசி மாதம் வரை இந்த பூக்கள் கிடைக்கும். அகத்தி பூக்களை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் காபி, டீ அதிகம் குடிப்பதனால் ஏற்படும் பித்தம் ஆகியவற்றை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். அகத்தி பூக்கள் 3 எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி பருகலாம். இந்த தேனீரை வாரம் ஒருமுறை குடித்துவர பித்தம் குறைந்து வெப்பம் தணியும். அகத்தியில் கால்சியம் அதிகளவில் உள்ளது. வைட்டமின் சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்தி, வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், தோல் பிரச்னை, பித்தத்தால் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை போக்குகிறது. காய்ச்சலை தணிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும் தன்மை கொண்டது. அகத்தி கீரையை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் ஏற்படும். இதை அளவுக்கு அதிமாக பயன்படுத்த கூடாது. அகத்தி வேரை பயன்படுத்தி உடல், கை கால் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பிடி அளவு வேரை சுத்தப்படுத்தி எடுக்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர உள்ளங்கை, கால் எரிச்சல் மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கண் எரிச்சல் குணமாகும். இதை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம். அகத்தியானது உடல் வெப்பத்தை சமப்படுத்தும் உன்னதமான உணவு. வயிற்று கிருமிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. பித்த சமனியாக விளங்குகிறது. அகத்தி கீரையை பயன்படுத்தி இளநரையை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கீரையை பசையாக்கி வைத்துக்கொள்ளவும். கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி பண்ணி எடுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு கீரை பசை, 2 பங்கு நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். சிறிது கிச்சிலி கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடி கலவையை சேர்க்கவும். பின்னர், ஆற வைத்து வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். இதை வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு இருக்காது. இளநரை வராது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

354

பூவைப் போன்ற கதிர்களை பெற்றிருக்கக் கூடிய இந்த கீரை வகையின் தாவர பெயர் செலோசியா அர்ஜென்டியா என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் நீண்ட வடிவத்தை கொண்டவையாக விளங்குகின்றன. அதன் தண்டுகள் நாயுருவி செடியைப் போன்று காணப்படுகின்றன. அகத்தி மற்றும் வேர்கடலையுடன் ஊடு பயிராகவும் வளர்க்கப்படுகிறது.  இந்த பண்ணை கீரை அருமையான உணவாகவும், மருந்தாகவும் பயன்படக் கூடியது.

இந்த கீரை ரத்தத்தை உறைய வைக்கும் பண்பை பெற்றிருக்கிறது. கற்களை உடைத்து கரைக்கும் தன்மை இதற்கு உள்ளது. இதனால் சிறுநீரகங்களில் ஏற்படும் கற்களை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடிய தன்மையும் இந்த கீரைக்கு உள்ளது. இதில் காணப்படும் வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உடலுக்கு ஊக்கத்தை அளிப்பதாக விளங்குகிறது.

குடலை பலப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றை பண்ணை கீரையின் இலைகளை பயன்படுத்தி தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் பண்ணை கீரை இலைகள், சோம்பு, பனங்கற்கண்டு. ஒரு பிடி அளவு பண்ணை கீரை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீர் விட்டு ஒரு கஷாயத்தை தயார் செய்து கொள்ளலாம். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றில் உள்ள, வாயில் உள்ள புண்களை ஆற்றும் குணமும் பண்ணை கீரைக்கு உள்ளது.

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியில் தள்ளி விடுவதால், இதை பருகுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னை தீரும். அது மட்டும் இன்றி குடலை பலப்படுத்துவதற்கும் இந்த பண்ணை கீரை மருந்தாகிறது. கேழ்வரகு களியுடன் பண்ணை கீரையை புளியுடன் கடைந்த கடைசலை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஊட்டமும் ஊக்கமும் கிடைக்கிறது. அதே போல பண்ணை கீரையின் பூக்களை பயன்படுத்தி கழிச்சல் மற்றும் பெரும்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் பண்ணை கீரையின் பூக்கள், பனங்கற்கண்டு. 5 அல்லது 6 பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் சேர்த்து தேநீராக்கி தயார் செய்து கொள்ள வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக் கூடிய பெரும்பாடு என்கிற பிரச்னை மற்றும் கழிச்சல் எனப்படும் சீத பேதி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் குணம் இதற்கு உள்ளது. இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றுள்ள பண்ணை கீரையை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஊக்கமும் நலமும் பெறலாம்.

SHARE