வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட மாகாண கண்காட்சி அக்டோ 01, 02 ம் திகதிகளில் நடைபெற்றது. கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 01.10.2016 அன்று மாலை 03 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஆரம்பமானது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாண்புமிகு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வுக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் J.J.C.பெலிசியன் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கண்காட்சியில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களினது தயாரிப்புக்கள் காட்சிப்படுத்தபட்டதுடன் அவற்றில் இருந்து சிறந்த படைப்புக்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது. அதில் முதலாம் இடத்தை யாழ் மாவட்டமும் இரண்டாம் இடத்தை மன்னார் மாவட்டமும் மூன்றாம் இடத்தினை முல்லைத்தீவு மாவட்டமும் பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வில் திணைக்களத்தினால் கிராம மட்ட சங்கங்களை பற்றிய தகவல் அடங்கிய இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதோடு திணைக்களத்தின் செயற்பாடுகளை உள்ளடக்கிய இறுவெட்டும் வெளியிடப்பட்டது. இவற்றினை பிரதம விருந்தினர் மாண்புமிகு முதலமைச்சர் வெளியிட்டு வைத்தார். மேலும் அந்நிகழ்வில் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டதுக்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது.