இலங்கையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு காவல்துறை அதிகாரத்தை கொடுப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விசேட கவனம் வெலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக கிராம உத்தியோகஸ்தர்கள் சமாதான அதிகாரிகளாக வலுவூட்டப்பட உள்ளனர். இதன் மூலம் கிராம உத்தியோகஸ்தர்களுக்கு இருக்கும் காவல்துறை அதிகாரத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இதுவரை காவல் நிலையத்தின் சிறிய முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி தீர்த்து வைத்து வந்த முறைப்பாடுகளை தீர்த்து வைக்கும் காவல்துறை அதிகாரத்தை கிராம உத்தியோகஸ்தர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளது.
14 ஆயிரம் கிராம உத்தியோகஸ்தர்கள் பணியில்
அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 14 ஆயிரம் கிராம உத்தியோகஸ்தர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதால், 14 ஆயிரம் பேரை காவல்துறையில் சேவைக்கு இணைத்துக்கொண்டமைக்கு அது ஈடாகும் என அரசாங்கம் நம்புகிறது.
இதன் போது காவல்துறை அதிகாரத்திற்கு இணையான அதிகாரத்தை கிராம உத்தியோகஸ்தர்களுக்கு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள கிராம உத்தியோகஸ்தர்களை இந்த பணி தொடர்பில் வலுவூட்ட காவல்துறை திணைக்களத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில், இனிவரும் காலங்களில் ஒருவரது தேசிய அடையாள அட்டை காணாமல் போகும் சந்தர்ப்பத்தில் அது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திடம் யோசனை
கிராம உத்தியோகஸ்தரிடம் அது தொடர்பாக முறைப்பாட்டை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். அத்துடன் கிராமங்களில் நடக்கும் சிறிய சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை காவல் நிலையத்திற்கு செல்லாது கிராம உத்தியோகஸ்தரிடம் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும்.
இந்த நடவடிக்கையால், மக்கள் காவல் நிலையங்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்கள் குறையும். கிராம உத்தியோகஸ்தர்களை வலுவூட்டுவதற்காக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திடம் இருந்து இதற்காக முதல் கட்டமாக எட்டரை மில்லியன் ரூபா நிதி கிடைக்க உள்ளது எனவும் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.