கிளிநொச்சியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் கர்ப்பிணித் தாய்மார்

139

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண் நோயியல் மகப்பேற்று நிபுணர்கள் எவரும் இல்லாத நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் விசனம் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கும் ஏனைய அயல் மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களினது மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வைத்தியசாலையாக குறித்த வைத்தியசாலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை உரிய முறையில் வழங்க இதுவரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காது வைத்தியசாலையில் இருக்கின்ற ஆளணி வளங்களை திட்டமிட்டு வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்து வருகின்றது.

இதனால் இங்குள்ள மக்கள் மருத்துவ தேவையை நிறைவு செய்ய முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய இரண்டு பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களில் ஒருவரை மத்திய சுகாதார அமைச்சு பொலன்னறுவைப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்ததுடன் அந்த வெற்றிடத்திற்கு அடுத்த மாதம் வெளிநாடு ஒன்றிற்கு மேலதிக மருத்துவக் கற்கைக்கு செல்லும் வைத்தியர் ஒருவரை நியமித்திருந்தது.

குறித்த வைத்தியர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு விடுமுறையில் சென்றுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே கடமையில் இருந்த மற்றைய வைத்தியரும் கடமைக்கு சமூகம் அளிக்காத நிலையில் நேற்று முன்தினம் முதல் கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார் அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாத முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் இவ்வைத்தியசாலையில் முதன் முறையாக நியமிக்கப்பட்டுள்ள உள்ளக பயிற்சி மருத்துவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கான வைத்திய நிபுணர்களையும் வைத்தியர்கள் மற்றும் ஆளணி வளங்களை நிரப்புவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதுடன்,

இங்கிருக்கின்ற வளங்களையும் குறைப்பதற்கான வேலைகளை திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது என பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் இல்லாத நிலை காணப்பட்டது போன்ற ஒரு நிலமை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கும் ஏற்படும் அபாயநிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சு என்பன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE