காணாமல் போனோர் தினமான இன்று வலிந்து காணாமல ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சார்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைகள் பற்றிய செயலணிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
அந்த மகஜரில் “நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைகள் பற்றிய செயலணியால் 2016 ஆகஸ்ட்டில் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் பாதிக்கப்பட்டோரின் குரலையும் உள்ளடக்கி அவர்களின் கோரிக்கைகளையும் உரிய முறையில் கவனத்தில் எடுத்து வெளிவந்துள்ளது.
எமது துயரங்கள், இழப்புகள், மறுக்கப்பட்டுள்ள உரிமைகள், தொடர்ந்தும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்பவற்றை உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு சர்வதேச நியாயப் பத்திரிகையாகவே இந்த அறிக்கையை நாம் பார்க்கின்றோம்.
இன்றைய இலங்கை அரசானது இயலாமையிலும், நல்லிணக்கம் சார்ந்து நேர்மையான எண்ணப்பாடு இல்லாமலும் இருப்பதாகவே காண்கின்றோம். எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதியை வழங்கவோ சமாதானமான வாழ்வை உருவாக்கவோ இயலாத நிலையில் இலங்கை அரசு உள்ளது என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு என்றும் வலியுறுத்தியிருந்தனர்.