கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம். கே. எம். மன்சூர் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மீண்டும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று வழக்கு அழைக்கப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.சீ.சபருள்ளா என்பவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் பற்றி நீதிபதி இரு தரப்பினருக்கும் விளங்கப்படுத்தினார்.
மேலும், அச்சுறுத்தல்களை தவிர்த்து அனைவரும் சட்ட வரம்பிற்குள் வந்து சட்டம் தொடர்பான நியாயங்களை முன்வைத்து தத்தமது வழக்குகளை கொண்டு நடாத்துமாறு நீதிபதி இருசாரருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நடாத்தப்படுகின்ற ஹர்த்தால்அனுஸ்டிப்பில் திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கமும் அனுசரனை வழங்கியுள்ளதால் இவ்வழக்கில் மனுதாரரான எம்.கே.எம்.மன்சூர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கிற்கு ஆஜராகவில்லை.
இதேவேளை எதிர் மனுதாரர் சார்பில் கிழக்கு மாகாண சபை சட்ட உத்தியோகத்தர் அனிபூலெப்பை உட்பட மனுதாரர்களான கிழக்கு மாகாண ஆளுநர் சார்பில் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆளுநர் அலுவலக இணைப்புச் செயலாளர் யூ.சிவராஜா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முத்துபண்டா மற்றும் எம்.டி.நிஸாம் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன் போது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இருதரப்பினருக்கும் கடுமையாக எச்சரித்து ஆலோசனைகளையும் வழங்கினார்.
கிழக்கு மாகாணத்தில் அதியுயர் மட்டத்தில் இருக்கின்ற இருவரும் சமூகவலைத்தளங்களில் ஆதரவுகளை பெற்று மக்கள் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்த வேண்டாமெனவும், பொதுமக்களின் ஆதரவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தங்களது ஆட்சேபனைகளையும், கருத்துக்களையும் தங்களது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சமர்பித்து தங்களது உரிமைகளை வென்றெடுக்கவும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அச்சுறுத்தல்களுக்கோ அல்லது தங்களது செல்வாக்குகளுக்கோ நீதிமன்றம் இடமளிக்காது எனவும் சட்டத்தையே நிலை நாட்டுவோம் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இதன் போது தெரிவித்துள்ளார்.