குடை – ந.தர்சினி நுண்கலைத்துறை:-

299

உன்னைப் பற்றி எழுத

எத்தணிக்கும் போதெல்லாம்

மீட்கும் நினைவுதனை

எந்தன் பேனா

வீரம்கொண்டு எழுதிட வைக்க

நான் கவி எழுத

காகிதத்தாளில் என்விம்பம்

ஏளனம் செய்கிறது என்னைப் பார்த்து.

 

என் தோழியாய்

தன் சிரம் நனைத்து

என் சிரம் காத்து

கதிரவன் கண்ணொளியில்

என் முகம் படாமல்தடுத்து

நான்செல்லும் இடமெல்லாம்

தொடர்ந்து வருபாள் என்னுடன்.

 

பேச்சுக்களிலே ஒரு குடை

செயல்களிலே பல கிளை

அடிமைக்காற்று அறைந்து செல்ல

குற்றவாளியாகிறது என் கை

பொறுப்பிலிருந்து விடுபட

விடவில்லை உள்மனம்

உரிமை தேடுகின்றது.

தந்திரங்கள் தடம்பதித்து

கோளக் குவளயத்தில் சுற்றுகின்ற

அதிகாரத்தின் மறுமுகம் அது

வகை நிறையாய் பல வர்ணத்தில்

மனதினைத் தொட்டுச்செல்ல

மக்களும் அதனை நம்பிட

பொய்தோற்றக்காட்சிகள் எம் முன்னே.

 

ஒரு குடையில் வாழ்வோம்

ஒன்றாக வாழ்வோம் என்று

வல்லபங்கள் பேசும்

வல்லபர்கள் எங்கே?

வந்தேறு குடிகள் போன்று

வயிற்றுக்கு ஒருபிடி உணவுகேட்டு

அநாதைகளாய் அகதிகளாய்

அகதி முகாம்களில் வாழும்

மக்களின் நிலையா

ஒரு குடையில் வாழ்வது?

 

ந.தர்சினி நுண்கலைத்துறை

SHARE