குமாரபுரம் படுகொலை மேன்முறையீட்டிற்கு வாய்ப்பு

227
குமாரபுரம் படுகொலைச் சம்பவத்திற்கு எதிரான சாட்சிகள் அடையாளம் காணப்பட்டிருந்த போதும் சந்தேகநபர்களை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த வழக்கை மேன்முறையீடு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.
வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.
சம்பவத்தை நேரடியாக கண்டவர்கள் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு சாட்சியமளித்துள்ள நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டமையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்வது மற்றும் வேறு எவ்வாறான நிவாரணங்கள் மூலமாக நீதியை பெற்றுக்கொள்ள முடியுமென தற்போது ஆராய்ந்து வருவதாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு குமாரபுரத்தில் 26 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 36 பேர் வரை காயமடைந்தனர். இது தொடர்பில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் 8 இராணுவ வீரர்கள் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டதோடு, ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 6 இராணுவ வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு அண்மையில் அநுராதபுரம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
SHARE