கொழும்பில் இடம்பெற்ற ’என்றிக் லைவ்’ என்ற இசை நிகழ்ச்சி தொடர்பாக குமார் சங்கக்காராவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.கடந்த 20ம் திகதி கொழும்பில் ’என்றிக் லைவ்’ இசை நிகழ்ச்சியை சங்கக்காரா, ஜெயவர்த்தனேயின் நிறுவனம் ஒன்று நடத்தியது.
இதில் மதுபானங்கள் பரிமாறப்பட்டதாகவும், இலங்கையின் கலாசாரத்துக்கு கேடு விளைவிக்கும் பல நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த இசை நிகழ்ச்சிக்காக தாங்கள் மன்னிப்பு கேருவதாகவும், நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை திரும்ப வழங்குவதாகவும் சங்கக்காராவும், ஜெயவர்த்தனேவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் சங்கக்காரா, போதை எதிர்ப்பு திட்டத்தின் விளம்பர தூதுவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது போன்ற மோசமான நிகழ்வுக்கு பின்னரும், ஜனாதிபதியின் விமர்சனத்திற்கு பிறகும் அவர் அந்த தூதுவர் பதவிக்கு தகுதியில்லாதவர் என்று அவர்கள் கூறி வருகின்றனர். கடந்த ஓகஸ்ட் 19ம் திகதி சங்ககக்காராவை தேசிய போதை மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் விளம்பர தூதுவராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளதோடு, இவ்வாறான நிகழ்ச்சிகள் இனிமேல் இலங்கையில் நடத்துவதற்கும் தடைவிதிப்பதாக அறிவித்திருந்தார். |