இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களது கல்வித் தகமை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும், ஆகக் குறைந்த கல்வித் தகமை உடையவர்கள் அதிகம் உள்ளனர் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலாபம் தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
குறைந்தபட்ச கல்வித் தகைமைகளைக் கூட பூர்த்தி செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் இலங்கையிலேயே உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உன்னதமான நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி எய்யாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதான இரண்டு கட்சிகளிலும் அங்கம் வகிக்கின்றனர்.
குறைந்த கல்வித் தகைமை உடையவர்களை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யும் மக்களை குறை சொல்ல முடியாது எனவும், வேட்பாளராக தெரிவு செய்யும் கட்சிகளே இந்த நிலைக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
நியோமல் பெரேரா மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், பிரதி வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.