குழந்தைகள் வேறுபாடுகளுடன் பிறப்பதில்லை என்ற கருத்துகளை கேட்டு தமிழ் சமூகம் சலித்து போயுள்ளது – அநுரவுக்கு மனோ பதில்

246
அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும் என கொழும்பு கம்பன் கழகத்தில் உரையாற்றிய என் இனிய நண்பர் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமையால் மகிழ்ச்சி அடைகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை நோக்கி ஜே.வி.பி இன்று நகர்வுகளை மேற்கொள்வதையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன். ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில், அடிப்படை உரிமை வரிசை பட்டியலில் அதிகாரப்பகிர்வு என்பதுவே எப்போதும் முதலிடத்தில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காகத்தான் தமிழர்கள் சொல்லொணா துன்பங்களை சந்தித்து சளைக்காது, 68 வருட கால சுதந்திர இலங்கையிலே பல்வேறு விதமாக போராடி வருகிறார்கள் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களை அணுகும் எந்த ஒரு கட்சியும் அதிகாரப்பகிர்வு என்ற விடயம் பற்றிய தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்.

இது இன்று தமிழ் மக்களை நோக்கி நகரும் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பிக்கும் பொருந்தும் என்பதை நண்பருக்கு எடுத்துக்கூற நான் கடமைப்பட்டுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தாயினதும் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் இன, மத வேறுபாடுகளுடன் பிறப்பதில்லை என்ற கருத்து உயரியது.

ஆனால், இத்தகைய கருத்துகளை ஜே.ஆர் முதல் ராஜபக்ஸ வரை சொல்லக்கேட்டு கைத்தட்டி, கைத்தட்டி தமிழ் சமூகம் சலித்து போயுள்ளது. நண்பர் அநுரவும் இதை சொல்லும் போது தமிழர்கள் மீண்டும் ஒருமுறை கைத்தட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களும் கூடவே கைத்தட்டுவார்கள். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் நடக்காது. நடக்க வேண்டும் என்றால் ஒரே நாடு என்ற வரையறைக்குள் அதிகாரப்பகிர்வு என்ற புதிய அத்தியாயத்தை ஜே.வி.பி திறக்க வேண்டும் என மனோ குறிப்பிட்டுள்ளார்.

இன மோதல்களுக்கு இனி ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்காது என்ற நண்பரின் உறுதிமொழியையும் நான் மதித்து வரவேற்கிறேன்.

ஆனால், நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற பாரிய யுத்தத்துக்கும், அதற்கு வழிகோலிய, அதிகாரங்களை பகிர்ந்து தரமறுக்கும் பிடிவாத இனவாதத்துக்கும், ஜே.வி.பியின் மருந்து என்ன என்பது பற்றி ஜே.வி.பியிடம் குழப்பமான நிலைப்பாடுகளையே காணக்கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே அநுர அடிப்படை உரிமை பற்றியும், ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் பற்றியும் பேசும் போது, இன்னொரு இடத்தில் ஜே.வி.பி பொதுசெயலாளர் நண்பர் டில்வின் சில்வா மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் போன்றோர் புதிய அரசியலமைப்பு முயற்சிகளையே நிராகரிக்கின்றார்கள் அல்லது எள்ளி நகையாடுகின்றார்கள் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்வை பற்றி பேசவே கூடாது என பயமுறுத்துகிறார்கள். யுத்தத்தை மஹிந்தவுடன் சேர்ந்து கைத்தட்டி ஆதரித்து விட்டார்கள். இனி யுத்தம் பற்றிய உண்மைகளை கண்டறிந்து தவறுகளை திருத்திக்கொண்டு, அதிகாரத்தை பகிர்ந்து, தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் போக்கையும் நிராகரிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்று இன்று மஹிந்தவை மீண்டும் கொண்டுவர உழைக்கும் நண்பர் விமல் வீரவங்சவின் நிலைப்பாடுகளும் இந்த விடயங்களில் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கின்றன. எனவே நாம் என்ன செய்வது? குழப்பத்தை தீர்த்து விடு நண்பா அநுர, என்று உரக்க கத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது என மனோ கணேசன் கூறியுள்ளார்.

தனது இந்த உரையை அப்படியே சிங்கள மொழியில் மொழிபெயர்த்து நண்பர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கும்படி ஜனநாயக இளைஞர் இணைய செயலாளருக்கு ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

4154506769_b0cb9ec914

 

SHARE