குழந்தைக்கு ஒருநாளைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கவேண்டும்?

321

‘தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் பிற்கால வாழ்வில் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உண்டு.

தாய்ப்பால்

தாய்ப்பால்

தாய்ப்பால்… குழந்தைகளின் முதல் அடிப்படை உரிமை. மனிதனின் முதல் உணவும் தாய்ப்பால்தான். ஒரு மனிதன் உயிர்வாழும் காலம் வரையில் அவனது ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக அமைவது, பிறந்த சில நிமிடங்களில் அவன் அருந்தும் தாய்ப்பால்தான். தாய்ப்பாலின் மகத்துவத்தைப் போற்றும் வகையிலும் அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை `உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்’ அனுசரிக்கப்படுகிறது.

குழந்தை பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாயும் குறிப்பிட்ட காலம்வரை தாய்ப்பால் கொடுக்கவேண்டியது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால்,’தன் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கிறோம்’ என்பதைத் தாய் உணரவேண்டும். ‘தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்துவிடும், உடல்எடை அதிகரிக்கும்’ போன்ற தகவல்கள் வெறும் வதந்தி. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் அதை அருந்துவதால் குழந்தைகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மீனா பிரகாஷ் விவரிக்கிறார்.

தாய் - குழந்தை

தாய் – குழந்தை

“பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தாய்ப்பாலில் குழந்தைக்கான அனைத்துச் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதை இயற்கையான ‘சூப்பர் டானிக்’ என்றே சொல்லலாம். தாய்ப்பாலில் காணப்படும் ஆன்டிபாடிஸ் குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளிடம் போராடிக் காப்பாற்றும் ஆற்றல்பெற்றது. முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே அருந்தும் குழந்தைகளை எந்த நோயும் நெருங்குவதில்லை.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு முக்கியக் காரணமாக விளங்குவது நுரையீரல்தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இந்த இரண்டு நோய்களும் தாக்காமல் குழந்தையைப் பாதுகாக்கமுடியும்.

குழந்தை

குழந்தை

குழந்தை பிறப்பதற்கு முன்பே எந்தப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று முடிவுசெய்து அதற்காக விண்ணப்பம் வாங்கும் பெற்றோர், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்குப் புத்திக்கூர்மை அதிகரிப்பதுடன் படிப்பிலும் கில்லியாக வலம் வருவார்கள் என்ற உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

‘தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் பிற்கால வாழ்வில் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உண்டு. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்க்கும்கூட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பால் கொடுப்பதால் தாயின் உடலில் உள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்படும். மேலும், கர்ப்பகாலத்தின்போது அதிகரித்த உடல்எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.

Mother and Child

தாய்ப்பால் புகட்டுவதால் `ஆக்சிடோசின்’ (Oxytocin) ஹார்மோன் சுரந்து, கர்ப்பகாலத்தின்போது விரிவடைந்த கருப்பை சுருங்கி இயல்பான அளவை அடையும். மேலும் மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், எலும்புத் தேய்மானம் போன்ற நோய்களிலிருந்தும் தாய்ப்பால் பாதுகாக்கும்.

குழந்தை பசித்து அழுகிறதா அல்லது வேறு காரணங்களுக்காக அழுகிறதா என்பதைத் தெரிந்துகொண்டு அதன்படி பால் புகட்டவேண்டும். இரவிலும் குழந்தைக்குப் பசிக்கும் என்பதால், இரவில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் தரவேண்டும். வேலைக்குச் செல்லும் தாய்கள் தாய்ப்பாலைப் புட்டியில் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டலாம். பாலைச் சேகரித்து வைத்துப் புகட்டுவதால் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைவாகக் கிடைக்கும். தாய்க்கும் மார்பில் பால்கட்டும் பிரச்னை ஏற்படாது. பசும்பால் மற்றும் பால் பவுடர்களை கொடுக்கவேண்டிய தேவை ஏற்படாது.

பால் புகட்டும் நேரம் குழந்தைக்கு குழந்தை மாறுபடலாம் என்பதால், இந்தந்த நேரத்தில்தான் பால் புகட்டவேண்டும் என்று கால அட்டவணை போடுவதைத் தவிர்க்கவேண்டும். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறைதான் பால் புகட்டவேண்டும் என்ற கட்டாயமில்லை. பாலுக்காகக் குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்”.

SHARE