கூட்டமைப்பில் சுமந்திரனிற்கே மண்டைவளம் கூட! பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் நற்சான்றிதழ்!
கூட்டமைப்பில் உள்ளவர்களுள் மண்டைவளம் மிக்கவர் சுமந்திரனேயென நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் வடமாகாணசபையின் பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன். அத்துடன் புலிகளால் பிடித்து செல்லப்பட்டவர்களிற்காக யாரது கொடும்பாவியை எரிப்பதெனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார்.
இதற்கு ஆதரவாக பேசிய பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியிலிருப்பதாக தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட மற்றொரு உறுப்பினர் அனந்தி சசிதரன் காணாமல் போனவர்களை தேடித்திரியும் அவர்களது குடும்பங்களிற்கே அதன் வலி தெரியும். ஜ.நா விசாரணை அறிக்கை மூலம் நல்லதொரு தீர்வு தமது விடயத்தில் கிடைக்குமென அவர்கள் காத்திருந்தனர். ஆனால் இப்போது சிலர் உள்ளக விசாரணை பற்றி பேசுகின்றார்கள். ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கும் அதே போன்று காணாமல் போனவர்களினை தேடிக்கண்டறியும் குழு விசாரணைகளிற்கு நடப்பது அனைவரிற்கும் தெரியும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதனை சிலர் அப்போது செய்திருக்கலாமென அனந்தி தெரிவித்தார். காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஜெனீவாவிற்கு எடுத்து செல்லுமாறு மகஜரொன்றை தரப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதை பெற்றுக்கொள்ளவே அங்கு சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அன்ரனி ஜெகநாதனின் பேச்சிற்கு குறுக்கிட்டு விளக்கமளிக்க மற்றொரு உறுப்பினரான சர்வேஸ்வரன் முற்பட்ட போதும் அதற்கு அவைத்தலைவர் அனுமதித்திருக்கவில்லை.
இந்நிலையில் ஆமிப்பிடித்து காணாமல் போனதற்கு சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பதானால் புலிகள் பிடித்து சென்றவர்களிற்கு யாருடைய கொடும்பாவிறை எரிப்பதென அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தன்னை மாவீரர் குடும்பமென அடையாளப்படுத்தியே அன்ரனி ஜெகநாதன் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.