கூட்டு எதிர்க்கட்சியின் ஆறு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களிக்க உள்ளனர்.
அரசாங்கத் தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னதாக இன்று அந்த உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளனர்.
அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது.
இந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட ஏற்கனவே இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் பத்து உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல அறிவித்திருந்தார்.
எனினும் கூட்டு எதிர்க்கட்சியின் எவரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அரசாங்கம் பொய்யாக இவ்வாறு பிரச்சாரம் செய்கின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.