சமீபத்தில் சமூக வலைதளங்களில் கையில் வெட்டிய தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வைரலாக பரவியது.
அவர் தன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை கொன்றதாக சரணடைந்தார். இந்த சம்பவம் காவலர்களுக்கே அதிர்ச்சியளித்தது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், அந்த இளைஞரின் தங்கை பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வரும் வழியில் ஒரு இளைஞனால் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தன் தங்கையின் எதிர்காலம் பற்றிய நல்ல கனவுகளோடு இருந்த அண்ணனுக்கு அவர் வாழ்க்கை சீரழிந்ததை அறிந்து ஆவேசத்தில் கிளம்பியுள்ளார். காரணமான இளைஞன் கையில் கிடைக்கவே தலையை வெட்டி எடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.
வாசகர்களின் கருத்துகள் சரியா?
இந்த தண்டனை சரியா தவறா என்ற கேள்விகளும் வாசகர்களின் கருத்துப்பதிவுகளும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதற்கு பெரும்பாலானவர்கள் தலையை வாங்கிய தண்டனை சரி என்றே கருத்து பதிவு செய்திருந்தனர்.
தன் தங்கையின் வாழ்வு அழிந்தது மட்டுமல்லாமல், ஒரு கொலையால் தன் வாழ்வையும் அழித்துக்கொண்டு அந்த இளைஞன் சிறை செல்வதை சரி என்று கூறுகிறார்களா?
அல்லது, சரியான காரணம்தான் என்று கொலைசெய்த இளைஞனை தண்டனை இல்லாமல் விட்டுவிடலாம் என்று கூறுகிறார்களா? புரியவில்லை. கொலை செய்யும்போது இருந்த ஆவேச மனநிலை, அந்த இளைஞனுக்கு சிறை தண்டனையின்போது இருக்கும் என்று சொல்ல முடியாது.
இதில் பெரும்பாலானவர்களுக்கு கொலைசெய்தது தவறு என்று சொன்னால், அது கற்பழித்தவனுக்கு சாதகமான கருத்தாகி, தங்களை ஒரு சமூக அக்கறை இல்லாதவனாக காட்டிவிடும் என்ற மனநிலை.
கொடிய தண்டனைகள்
இப்படிப்பட்ட கொடூர தண்டனைகள்தான் அதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காதிருக்க ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதும் சிலர் கருத்து.
ஆனால், நாடறிந்த நிருபமா வழக்கில் கற்பழித்தவனுக்கு தூக்குத் தண்டனை, சிறுமியை கற்பழித்தவனை கட்டிவைத்து உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியது. கற்பழித்தவனின் பிறப்புறுப்பை அறுத்து அவன் வாயிலே வைத்து சித்ரவதை, தலையை வெட்டுவது போன்ற எத்தனையோ கொடிய தண்டனைகள் தனிமனிதராலும் ஒரு சமூகத்தாலும் சட்டத்தாலும் கொடுக்கப்படுகிறது. இது ஊடகங்களிலும் வலைதளங்களிலும் வைரலாக பரவவும் செய்கிறது.
ஆனாலும், அடுத்தடுத்து பாலியல் வன்முறைகள் நடக்கவே செய்கிறது.
போதாததா? பொருத்தமில்லாததா?
அந்த தவறை செய்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டிருப்பது தெரியாதா? தெரிந்தும் தான் செய்வது வெளிச்சத்துக்கு வராது என்று சாதகமாக நினைக்கிறார்களா? அல்லது அந்த உணர்ச்சியில் எதையும் யோசிக்க மறக்கிறார்களா? அல்லது ஒரு இன்பத்திற்கு பின்புதானே தண்டனை, கிடைப்பது கிடைக்கட்டும் என துணிகிறார்களா? என்பது புரியவில்லை.
ஆனால், தொடரும் பாலியல் வன்முறைகள் இந்த கொடிய தண்டனைகள் போதாதது என்பதைவிட பொருத்தமில்லாதது என்பதையே பிரதிபலிக்கின்றன.
ஆனாலும், இதுபோன்ற கடுமையான தண்டனைகளுக்கு பயந்து, தங்கள் இச்சைகளை கட்டுப்படுத்திக்கொள்ளும் சேதமில்லாமல் வாழ நினைப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இது தண்டனையின் பயன்.
பொதுவான உணர்ச்சிகள்
வன்புணர்வுக்கு காரணமான செக்ஸ் உணர்ச்சிகள், எல்லோரையும் போல பொதுவானதுதான். அது ஒரு நோய் போல திடீரென தோன்றுகிற விஷயம் அல்ல. செக்ஸ் மீதான புரிதலின்மையும் தன்மீதான கட்டுப்பாடின்மையுமே வன்புணர்ச்சி செய்பவர்களின் குற்றமாக உள்ளது.
வன்புணர்வு செய்தவனை கடுமையாக தண்டிப்பதை ஆதரிக்கும் இந்த சமூகம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருந்துபோடுவது போன்ற ஒரு தீர்வு வைத்திருப்பது கிடையாது.
ஒரு பெண்ணின் விருப்பமற்ற வன்புணர்வில் கூட, அவளுக்கு ஏற்படுத்தும் பெரிய அவமானமும் வாழ்க்கைச் சீரழிவும் இந்த சமூக மனநிலையில் உருவாகி இருக்கும் பெரிய குற்றம் என்றே சொல்லலாம்.
அத்தகைய சமூக பயமும் ஒரு நாயகத்தனமும் இந்த இளைஞன் தலையை வெட்டிய செயலில் உள்ளார்ந்த காரணங்களாக வேரோடியிருக்கிறது எனலாம்.
பெண்ணின் அனுமதி இல்லாமல் வன்புணர்வு கொள்ள முடியாது என்ற கருத்து ஏற்புடையது அல்ல, நிர்ப்பந்திக்கும் சூழலும் தவறுதான்.
வன்புணர்வு சம்பவங்களை படிக்கும் போது, தங்களுடைய வாழ்க்கையில் ஒரு காலத்தில் நடந்த அத்தகைய சம்பவங்களை நினைத்துப்பார்க்கும் சில அந்தஸ்தான மனிதர்களில் ஆண்களும் பெண்களும் உண்டு.
திரையுலக பிரமுகர்கள், அரசியல் பொறுப்புகளில் இருப்பவர்கள் உட்பட பல பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கை அவ்வப்போது வெளியில் கசியும்போது, நாம் அருவருப்பதும் அதே அடித்தள உணர்ச்சிகளைதான்.
கிடைப்பவர்கள் எட்டிப்பறிப்பதிலும் கிடைக்காதவர்கள் தட்டிப்பறிப்பதிலும் ஆசை ஒன்றுதான் அணுகுமுறைதான் வேறுபடுகிறது. அந்த அணுகுமுறையை ஒவ்வொரு மனிதனுக்கும் கற்பிக்க வேண்டிய பொறுப்பு கல்விக்கும் சமூகத்திற்கும் அரசுக்கும் நிச்சயம் உண்டு.
பாம்பு கடித்தால் ஏற்படுகிற மரணம், ஈ, எறும்பு கடிப்பதிலும் ஏற்படுமானால் மனித குலத்தின் நிலை என்னவாகும்? அதன் தர்மம் அறிந்துதான் விஷப்பாம்புகளின் எண்ணிக்கையை குறைத்து தூரத்திலும், விஷமில்லா ஈ, எறும்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து அருகிலும் மனிதனோடு வாழவைத்துள்ளது இயற்கை.
பசிக்கு அடுத்தபடியான ஒரு மிகவும் அடிப்படையான விஷயம் செக்ஸ். வன்புணர்ச்சி போன்ற அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு தீர்வு காண, கொடிய தண்டனைகளை மட்டுமே நம்புவது, தர்மம் இல்லாத தடாலடி நடவடிக்கையே!
வன்புணர்வும், கொடிய தண்டனைகளும் இல்லாத ஒரு நல்ல சமூகம் நாம் இன்னும் சிந்திக்க வேண்டிய தீர்வாக உள்ளது.