கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி நிலையில் இருந்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அதில் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கு அமைய தராதரம் பாராது கைதுசெய்து உடன் மன்றில் ஆஜர்செய்யுமாறும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
கொட்டாஞ்சேனையில் கடந்த 2008ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவடிவேல் லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் கையேற்கும் முகமாக நேற்று கொழும்பு மேலதிக நீதிவானிடம் முன்வைத்த தகவல்களுக்கு அமைவாகவே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஏற்கனவே 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் விவகாரங்கள் தொடர்பில் தனது விசாரணையில் கடற்படையின் உளவுப் பிரிவுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் எதிராக நூற்றுக்கணக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதே கடற்படை குழுவின் உறுப்பினர்களே கொட்டாஞ்சேனைக் கடத்தல்களையும் செய்துள்ளமை தமது விசாரணையில் உறுதியாகியுள்ளதாகவும் சிறப்பு விசாரணை அதிகாரி அறிக்கை ஊடாக நேற்று மன்றுக்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்த கடத்தல்கள் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணைகளை செய்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும், கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை பொலிஸாரும் தகவல்களை மறைக்கும் வண்ணமும் பொறுப்பற்று செயற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிறப்பு விசாரணை அதிகாரியான நிஸாந்த சில்வா மன்றுக்கு அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று மன்றுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி தனது பாதுகாப்பு உத்தியோகத்தரான லெப்டினன் கொமாண்டர் முனசிங்க ஆரச்சிகே தொன் நிலந்த சம்பத் முனசிங்கவுக்கு எதிராக செய்த முறைப்பாடானது மேலதிக விசாரணைகளுக்காக 2009 ஜூன் 10ம் திகதி பொலிஸ் மா அதிபரால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் நாம் முன்னெடுத்த விசாரணைகளில் சம்பத் முனசிங்கவின் கீழ் இருந்த கரண்ணாகொடவின் பாதுகாப்பு அணியில் இருந்து , தற்போது ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் விளக்கமறியலில் உள்ள லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆராச்சியின் கீழான குழுவே இந்த கடத்தல்களை முன்னெடுத்திருந்தமை தெரியவந்தது.
எலகந்த, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13, தெஹிவளை – பெர்ணான்டோ வீதி, கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு உக்திகளை பயன்படுத்தி இக்கடத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சூசைப்பிள்ளை அமலன் லியோன், ரொஹான் ஸ்டென்லி லியோன், கஸ்தூரி ஆரச்சிகே எண்டன், கஸ்தூரி ஆரச்சிகே ஜோன் ரீட், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹமட்டிலான் ஜமால்டீன், சாஜித் மொஹம்மட், அலி அஸ்வர் அல்லது ஹாஜியார் ஆகிய 11 பேர் கடத்தப்ப்ட்டு திருகோணமலை கடற்படை முகாம் வளாகத்தில் உள்ள கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீடத்தின் அருகே உள்ள கண்சைட் எனும் நிலத்தடி சிறைக் கூட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொமாண்டர் ரணசிங்க சுமித் ரணசிங்க என்பவரின் கீழ் இருந்த அந்த சிறையில் சட்ட விரோதமாக மனித உரிமைகள் மீறப்படும் வண்ணம் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதில் ரஜீவ் லோகநாதனும் அலி அஸ்வரும் கன்சைட் நிலத்தடி முகாமில் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் 100 சாட்சியங்கள் உள்ளன.
இந் நிலையில் கடந்த 2008 ஆகஸ்ட் 9ம் திகதி 38/28 ரத்னம் வீதி கொட்டாஞ்ச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிகே ஜோன் ரீட் கடத்தப்பட்ட போது அவரது 56 – 5536 எனும் டொல்பின் ரக வானும் எடுத்துச் செல்லப்ப்ட்டிருந்தது. இந்த வேனானது கடற்படை இலக்கத்தகட்டுடன் 6021 எனும் இலக்கத்தின் கீழ் திருகோணமலை கடற்படை முகாமில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை நாம் கடந்த 2015 நவம்பர் 18ம் திகதி கைப்பற்றினோம். தற்போது அந்த வான் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் உள்ளது.இந்த வாகனத்தின் கதவுகள் வெலிசறை கடற்படை முகாமின் உளவுப் பிரிவுக்கு சொந்தமான இரகசிய அறை ஒன்றில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நாம் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அங்கு தேடுதல் நடத்தினோம்.
2016 பெப்ரவரி 11ம் திகதி நாம் செய்த சோதனையில் 72 துண்டுகளாக பிரிக்கப்பட்ட வாகனம் மீட்கப்பட்டது. அத்துடன் அந்த அறையில் சீ.ஜீ 125 ஈ – 1810450 எனும் எஞ்சின் இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.37வது துண்டில் இருந்து வான் ஒன்றின் செஸி இலக்கம் இரசாயன பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டது. அதுவே காணாமல் போன வடிவேல் லோகநாதனுடையதாகும்.
அத்துடன் அவரது 0722905933 என்ற இலக்கத்தை உடைய கையடக்கத் தொலைபேசியானது பஸ் ஒன்றில் விழுந்து கிடந்ததாக கூறி கடற்படை வீரர் ஒருவரினால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அந்த விசாரணை இடம்பெறாது அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன.
பொரளை, கொட்டாஞ்ச் சேனை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரின் ஆரம்ப விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை. அவர்களும் பொறுப்பற்று செயற்பட்டு தகவல்களை மறைத்துள்ளனர்.வடிவேல் பக்கிளிசாமியின் தொலைபேசியை வெலிசறை முகாமில் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய லெப்டினன் கொமாண்டர் தொன் சுமேத சம்பத் தயானந்த என்பவரே கண்டெடுத்து கொடுத்துள்ளமையும் அவருக்கும் அவரது குழுவுக்கும் தெரிந்தே இவரின் கடத்தல் இடம்பெற்றுள்ளமையும் இது வரையிலான விசாரணையில் உறுதியாகியுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமின் உளவுப் பிரிவு அதிகாரியான லெப்டினன் கொமாண்டர் டக்ளஸ் ஊடாக கொமாண்டர் தேவேந்திர கெப்டன் தேவகே ஆகியோருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ அது கடற்படையினரின் வேலை’ எனக் கூறி அவர்களும் அதனை மறைத்து பொறுப்பற்ற செயற்பட்டுள்ளனர்.அதனால் தகவல் தெரிந்தும் அதனை மறைத்து பொறுப்பற்று செயற்பட்ட விசாரணையாளர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்ப்ட்டுள்ளது.
இந்த அறிக்கை சமர்ப்பிப்பின் பின்னர் சிறப்பு விசாரணை அதிகாரியான நிஸாந்த பீரிஸ் நாங்கள் பொது மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுவோர். எனவே அவர்கள் எதிர்ப்பார்க்கும் நீதியை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். எனினும் அப்போது விசாரணைச் செய்தோர் பொறுப்பபற்ற செயற்பட்டுள்ளனர். என திறந்த மன்றில் அறிவித்தார்.
இதனை அவதானித்த நீதிவான் நிசாந்த பீரிஸ், இது குறித்து கடற்படை தளபதியிடம் இருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள். கடற்படை தளபதியாக இருந்தாலும் குற்றம் புரிந்திருந்தால் கைது செய்யுங்கள். தராதரம் பாராது இக்கடத்தல்களுடன் தொடர்புடையோரை உடன் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துங்கள் என புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 29ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.