கொதிப்பைக் கொட்டித் தீர்த்த சாமுவேல்ஸ்

251
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய மர்லன் சாமுவேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஷேன் வார்னே மீதான பகையையும் தீர்த்துக் கொண்டார்.பிக் பாஷ் லீக் டி20 போட்டிகளின் போது ஷேன் வார்ன்- சாமுவேல்ஸ் மோதிக் கொண்டனர். இந்த மோதல் கைகலப்பு வரையும் சென்றது.

இந்நிலையில் நேற்று ஆட்டம் முடிந்த கையோடு கால்காப்பைக் கூட அவிழ்க்காமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சாமுவேல்ஸ் தனது கொதிப்பைக் கொட்டித் தீர்த்து விட்டார்.

அவர் கூறுகையில், “இந்த டிராபி ஷேன் வார்னுக்கு தான். நான் எந்த அணிக்காக விளையாடினாலும் ஷேன் வார்ன் என்னுடன் பிரச்சனை செய்கிறார்.

இத்தனைக்கும் நான் அவரை மரியாதை குறைவாக மதிப்பிட்டதில்லை. ஆனால் என்னவென்றுதான் எனக்குத் தெரியவில்லை. என்னைப்பற்றி அவர் பேசிவரும் விதமும் செய்து வரும் காரியங்களும் எனக்கு பிடிக்கவில்லை.

அதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை, என் முகம் நிஜமானது, ஆனால் அவரது முகம் நிஜமற்றது என்பதனால் கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும், நேற்று கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் விளாசப்பட்ட பென் ஸ்டோக்ஸூடனும் சாமுவேல்ஸுக்கு தகராறு ஏற்பட்டது.

நேற்று சாமுவேல்ஸூக்கு ஒரு பிடியெடுப்பு தரையில் பட்டு கீப்பரிடம் சென்றது. அதை இங்கிலாந்து கொண்டாட, ரீப்ளேயில் பந்து தரையில் பட்டு பிடித்தது நன்றாக தெரிந்தது.

இதனால் சாமுவேல்ஸ் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்தார். அப்போது ஸ்டோக்ஸுக்கும் சாமுவேல்ஸுக்கும் இடையே சில கோப வார்த்தைகள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தனது மேல் சட்டையை கழற்றிய சாமுவேல்ஸ் இங்கிலாந்து ஓய்வறைக்கு சென்று சில செய்கைகளை செய்ய முயன்றுள்ளார். இதனால் அவருக்கு 30% தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE