தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள சபாநாயகர் கருஜயசூரிய, இது விடயம் சம்பந்தமாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
அவர் தமது ஒழுங்குப் பிரச்சினையில், “ஒரு சம்பவம் தொடர்பில் தனக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
இதை சாதாரணமாக கருதிவிட முடியாது. இது பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஒரு விடயம் தொடர்பில் ஆராய்ந்து தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கும் உரிமை சபாநாயகருக்கு இருக்கின்றது.
அந்த அறிவிப்பு தனக்கு சாதகமில்லாத பட்டசத்தில் சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பது பயங்கரமான நிலையாகும்.
எனவே, கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? எதற்காக மிரட்டல் விடுக்கப்பட்டது? தொலைபேசி இலக்கம் குறித்து ஆராயப்பட்டதா?” – என்று வினவினார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர், “இது பற்றி ஆராயுமாறு எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளேன். அரசியல் பயணத்தில் நான் பல அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன். எனவே, இதற்கு நான் சளைக்கவில்லை” என்றார்.