பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வந்த சகோதரிகள் இருவரை வழிமறைத்து துப்பாக்கி முனையில் ரூ.80 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் கொள்ளையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் நாட்டை சேர்ந்த 60 வயதான சகோதரிகள் இருவர் கடந்த திங்கள் கிழமை அன்று பிரான்ஸ் தலைநகரமான பாரீஸிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
புறநகர் பாரீஸில் உள்ள Le Bourget விமான நிலையத்தில் இறங்கிய இருவரும் பெண்ட்லி என்ற சொகுசு காரில் பாரீஸ் நகருக்கு பயணமாகியுள்ளனர்.
காரை சகோதரிகளின் நம்பிக்கைக்குரிய ஓட்டுனர் ஒருவர் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, இந்த காரை நீண்ட நேரமாக மற்றொரு கார் பின் தொடர்ந்துள்ளது.
சில நிமிடங்களுக்கு பிறகு திடீரென பெண்ட்லி காருக்கு முன்னால் சென்ற கார் அதனை வழிமறைத்து நின்றுள்ளது.
காரில் இருந்து முகமூடி அணிந்த நபர்கள் சிலர் துப்பாக்கியுடன் பெண்ட்லி காரை நெறுங்கி ஓட்டுனரை மிரட்டியுள்ளனர்.
பின்னர், காரில் இருந்த சகோதரிகளுக்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. மேலும், கொள்ளையிட்டுள்ள பொருட்களின் மதிப்பு 5.3 மில்லியன் டொலர்(79,20,05,500 இலங்கை ரூபாய்) இருக்கும் என கூறப்படுகிறது.
பாரீஸ் நகருக்கு அருகில் நடந்துள்ள இக்கொள்ளை சம்பவமாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே மாத தொடக்கத்தில் இந்திய நடிகையான மல்லிகா ஷெராவத்தை தாக்கி அவரிடம் கொள்ளையடிக்க சிலர் முயன்று தப்பியுள்ளனர்.
மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மொடலான கிம் கர்தஷியானை கடத்தி துப்பாக்கி முனையில் மில்லியன் கணக்கிலான நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டனர்.
உலகளவில் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான பாரீஸில் இதுபோன்று அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.