இலங்கையின் தேசிய அணி வீரர்களும் உள்ளூர் கழக மற்றும் இளையோர் அணி வீரர்கள் ஆகியோர் ஒரே அணியில் விளையாடும் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் இரண்டாவது தடவையாக நடத்தும் இந்தத் தொடரில் மொத்தம் நான்கு அணிகள் பங்கேற்கின்றன.
‘சுப்பர் ப்ரொவின்ஸல் தொடர் ‘என்ற பெயரில் விளையாடப்படும் இந்தத் தொடரின் அறிமுகவிழா நேற்று நடைபெற்றது.
கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன.
எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் மற்றும் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இலங்கை ‘ஏ’ அணியின் சுற்றுப்பயணங்களை இலக்காகக் கொண்டு இப்போட்டித் தொடர் நடத்தப்படுகின்றது.
இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் தேசிய அணி வீரர்களோடு சுமார் 80 வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
இதில் கொழும்பு அணியின் தலைவராக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலும், கண்டி அணிக்கு இலங்கை ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும், காலி அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் உபதலைவர் சுரங்க லக்மாலும், தம்புள்ளை அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானம், ஹம்பாந்தோட்டை மைதானம் மற்றும் தம்புள்ளை ரங்கிரி மைதானம் என்பவற்றில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது எதிரணிகளுடன் தலா ஒரு முறை மோதவுள்ளன.
அத்துடன், இந்தத் தொடரின் இரண்டு போட்டிகள் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன.
நேற்று நடைபெற்ற அறிமுகவிழாவில் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால பேசுகையில், இங்கிலாந்தின் கவுண்டி மற்றும் இந்தியாவின் ராஞ்சி போட்டித் தொடர் போல இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.
அந்தவகையில் இந்த நான்கு நாட்கள் கிரிக்கெட் எமக்கு சிறந்ததொரு ஆரம்பமாக அமையும் என்று நம்புகின்றோம்.
அத்தோடு இளம் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளை யாடிய அனுபவம் பெற்ற மூத்த வீரர்களுடன் விளையாடுவதால் அவர்களின் எதிர்காலத்திற்கு அது உதவியாக இருக்கும் என்றார்.