கோட்டாபய உட்பட 8 பேரிடம் நேற்று தீவிர விசாரணை!

343

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உட்பட 8 பேரிடம் நேற்றுக் காலை 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணை நடவடிக்கைகள் நேற்றைய தினம் முழுமைப் பெறாததால் இன்றைய தினமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கோட்டபய ராஜபக்‌ஷ, ரக்ன லங்கா நிறுவனத்தின் முக்கிய பதவி களை வகித்துவந்த மேஜர் ஜெனரல்களான பாலித பெர்னாண்டோ, எகொடவல, ஏ.சொய்சா, முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபைத் தலைவர் தனசிறி அமரதுங்க ஆகியோரை நேற்றைய தினம் ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பின்பேரிலேயே இவர்களிடம் நேற்றைய தினம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரக்ன லங்கா நிதியை தேர்தலுக்குச் செலவிட்டமை, அரச நிதி மற்றும் மனித வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை, சட்டவிரோத நியமனம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்விசாரணைகள் நேற்றைய தினம் முழுமைப் பெறாததால் இன்றைய தினமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த மோசடிகள் தொடர்பில் கடந்த 24ஆம் திகதியும் கோட்டாவிடம் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE