நேற்றையதினம் இடம்பெற்ற முழங்காவில் பேரூந்து நிலைய திறப்புவிழாவில் உரையாற்றிய வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது உரையில், சாரதிகள் அனைவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையேல் நாடு சுடுகாடாகும் என்று தெரிவித்திருந்தார் மேலும் அந்த உரையில் எந்த ஒரு விடயத்தை நாம் செய்வதானாலும் சட்டத்தைக் கடைப்பிடித்தே செய்யவேண்டும், ஒரு நாட்டில் ஒரு நிமிடம் சட்டம் செயலிளக்குமானால் அந்த நாட்டின் அனைத்து நிர்வாகச் செயற்பபாடுகளும் தலைகீழாகும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆகவே ஒரு நாட்டின் சகல துறையினரும் அந்தந்த துறைசார்ந்த சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும், எனவே இதுதொடர்பில் சாரதிகள் மிகவும் அவதானமாக ஒவ்வொரு வீதி சமிக்கைகளையும் கடைப்பிடித்து வீதியில் செல்லும் ஏனைய பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும், எமது மாகாணத்தில் கடந்த ஆண்டு இயற்க்கை மரணத்தைவிடவும் வீதி விபத்துக்களாலேயே அதிக மரணம் சம்பவித்துள்ளதாக தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது, இதற்க்கு பெருமளவில் சாரதிகளின் அசமந்தப்போக்கே பிரதான காரணமாகவும் காணப்படுகின்றது என்றும்.
இன்று பேரூந்துகளை எடுத்துக்கொண்டால் இலங்கைப் போக்குவரத்து சபைக்கும் தனியார் பேரூந்துகளுக்கும் இடையில் காணப்படும் போட்டித் தன்மையால் வீதிகளில் போட்டியிட்டு சமாந்தரமாக செல்வதை காணமுடிகின்றது. இந்தப் போட்டித்தன்மை வீதியில் சென்றுகொண்டிருக்கும் பொதுமக்களினதும், பேரூந்துகளில் பயணம் செய்யும் பயணிகளினதும் உயிர்களையே அநியாயமாகக் காவுகொள்ளும் சந்தர்ப்பத்தை தோற்றுவிக்கின்றது. இதே போலதான் அண்மையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்திலும் பாடசாலைக்கு சிட்டாய் சென்று வீட்டுக்கு உயிரின்றி கொண்டுசெல்லப்பட்ட பாடசாலைச் சிறுவன் சுவஸ்திகனுக்கு ஏற்ப்பட்ட விபத்தும், இதிலேயும் இந்த பேரூந்து சாரதிகளின் போட்டித்தன்மையே பிரதான காரணமாக இருக்கின்றது. ஒரு உயிர் போனபின்பு சிந்திக்காமல் முன்னரே சிந்தித்திருந்தால் அந்த சிறுவன் இன்று உயிரோடு இருந்திருப்பான்… இன்று அந்த சின்னஞ் சிறுவனை பறிகொடுத்துவிட்டு அந்தப் பெற்றோர் படும் அளவற்ற துன்பத்துக்கு யார் ஆறுதல் கூற முடியும், சாரதிகளே உங்களுடைய குழந்தைகளுக்கு இவாறு ஓர் நிலை ஏற்ப்பட்டால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? சிந்தியுங்கள்…
அந்த சாரதி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிந்து வீடு திரும்பிவிடுவார் ஆனால் சென்ற அந்த சிறுவனின் உயிர் மீண்டும் வருமா? சாரதிகள் இவ்விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகின்றது ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது அதனை பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும் என்றும், இவ்வாறு அசமந்தப்போக்கில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்குட்ப்படுத்தப்படவேண்டு ம், இந்த விடயத்தில் சட்டத்தை அமுல்ப்படுத்தும் காவல்த்துறையினரும், நீதித்துறையும் மிகவும் சரியான முறையில் இவர்களுக்கு தண்டனைகளை வழங்கும் பட்சத்திலேயே இவ்வாறான விபத்துக்களை இனிவரும் காலங்களில் குறைத்து உயிர்களைக் காக்கமுடியும். இதுவரை நாம் விபத்துக்களில் இழந்த உயிர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சம்மந்தப்பட்ட இரண்டு போக்குவரத்துத் தரப்பினரும் எதிர்காலத்தில் சட்டத்தை வலுவாகக் கடைப்பிடித்து விபத்துக்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும், எதிர்வரும் காலத்தில் எமது மாகாணத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்ற அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும் அவ்வாறு அமுல்படுத்தப்படும் ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்காத சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அங்கு எச்சரித்தார்.