சமாதானத்தின் ஊடாகவே நத்தாரை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும்

156

 

சமாதானத்தின் ஊடாகவே நத்தாரை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும்

சமாதானம் மற்றும் அன்பின் நற்செய்தியுடன் தேவ மைந்தன் இயேசுநாதர் பிறந்தமையைக் கொண்டாடும் நத்தார் தினம் கிறிஸ்தவமக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடும் ஓர் பண்டிகையாகும். தற்போது அது கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி இன, மத பேதமின்றி பெரும்பாலான உலகமக்கள் கொண்டாடும் கலாசார நிகழ்வாகவும் மாறியுள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உரோம வல்லரசின் சமூக,பொருளாதார முறைமையினுள் மக்கள் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் இயேசுநாதர் மாட்டுத் தொட்டிலில், ஏழைப் பெற்றோருக்கு மகனாப் பிறக்கிறார். அவர் பௌதீக, மானசீக ,ஆன்மீக வறுமையிலிருந்து, அடக்குமுறையிலிருந்து மீள்வதற்காக அன்பு, ஆதரவு, கருணைமிகுந்த சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்.

இன, மத பேதங்களைத் தாண்டிய, சமாதானம், நல்லிணக்கம் மிகுந்த, நற்பண்புகள் நிறைந்த சிறந்த சூழலொன்றையும் சட்டம், சமாதானம், நீதி என்பன ஆதிக்கம் செலுத்தும் சிறப்பானதோர் தேசத்தையுமே இன்று எமது சமூகமும் வேண்டி நிற்கிறது. நல்லமனிதன் தனது உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள நல்ல அம்சங்களையும், கெட்டமனிதன் தனதுஉள்ளத்தில் மறைத்து வைத்துள்ள கெட்ட அம்சங்களையும் வெளிப்படுத்துவதாக பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நல்ல அம்சங்களினால் நமது உள்ளங்களை நிரப்பி, சிறந்த மனிதர்களாக சமூகத்தை வளப்படுத்துவதனையே நாம் அனைவரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

சமாதானத்தின் மைந்தன் என அழைக்கப்படும் இயேசுநாதரின் பிறப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். உங்கள் அனைவருக்கும் எழில்மிகு மற்றும் அர்த்தம் பொருந்திய நத்தார் தினமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் .

SHARE