சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சகலதுறை ஆட்டக்காரரான திலகரட்ன டில்ஷான் அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
சிறைச்சாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பங்குபற்றியமை தொடர்பில் டில்ஷான் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சிறைச்சாலைக்கு முன் டில்ஷானை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அணிதிரண்டு அவரை சூழ்ந்து கொண்டமையை காணக்கூடியதாக உள்ளது.
எனினும் இவர் இந்தக் கூட்டத்தை உதாசீனப்படுத்தாமல் அனைவருடனும் நீண்டநேரம் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து சிறைச்சாலைக் சென்ற டில்ஷான் அங்குள்ள கைதிகளுடனும் கலந்துரையாடி குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
அண்மையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற டில்ஷான் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில், இவருடைய சிறைச்சாலை விஜயம் மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகப்பணிகளினூடாக அரசியலுக்கு வந்து விடுவாரா டில்ஷான் என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.