இலங்கை வந்தடைந்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ள நிலையில் இதன்போது பொறுப்புக்கூறல் விசாரணையில் சர்வதேச பங்களிப்பு தொடர்பில் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று இலங்கை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்றுமாலையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அந்த வகையில் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளிநாட்டு நீதிவான்கள் தொடர்பில்
பான் கீ மூன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதிவான்களின் பங்களிப்பு குறித்தும் பேசுவார் என பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கவே ஐக்கிய நாடுகள் அமைப்பு விரும்புவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின்போது விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு குறித்து பேசப்படும் என்று நம்பப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் என திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
குறிப்பாக இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கிய ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் ஜெனிவா பிரேரணைக்கு ஏற்ப விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பாகவும் அரச தரப்புடனான பேச்சுக்களின்போது ஆராயப்படவுள்ளது. அத்துடன் ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் குறித்து அரசாங்க தரப்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதேவேளை இன்று மாலை காலிக்கு விஜயம் செய்து நல்லிணக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உரையாற்றவுள்ளார்.
இது இவ்வாறு இருக்க நாளை வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் செல்லும் பான் கீ மூன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழில் சந்திப்புக்களை முடித்துவிட்டு கொழும்பு திரும்பும் பான் கீ மூன் மாலை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பாக விளக்கமளிப்பார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததுடன் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்திருந்தார். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் ஐ.நா. செயலர் பான் கீ மூனும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.
மேலும் 2015 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அந்தப் பிரேரணையில் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே
பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.