சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கலந்துகொண்ட ஊர்வலம் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி நகர மணிக்கூட்டுக் கோபுரம், திருமலை வீதி, பார் வீதி வழியாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தை சென்றடைந்தது. மாற்றுத் திறனாளிகளின் திறமைகள் மற்றும் அவர்கள் பெற்ற அடைவு மட்டங்களை வெளிப்படுத்தும் வீதி நாடகங்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகளின் இவ்வருடத்திற்கான ஆய்வுப் பொருளாக உள்வாங்கல் முக்கியமானதாகும், சகல ஆற்றல்களும் கொண்ட மக்களுக்கான அணுகு வசதியும் வலுவூட்டலும் எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.