சவுதியில் ஆறுமாதத்திற்கு முன் இறந்தவரின் உடல் இன்று இலங்கைக்கு

273
சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்குச் சென்று கடந்த செப்டெம்பர் மாதம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இலங்கை பிரஜையின் உடல் இன்று தாயகத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.

மேற்படி தற்கொலை செய்து கொண்ட நபர் காரைதீவு 04 ஆம் பிரிவைச் சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையான அருளையா ஆறுமுகம் யுகராசா (வயது 44) ஆவார்.

இவர் கடந்த 09.09.2015அன்று சவுதியில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி என்.நவகுமாரி காரைதீவு மனித அபிவிருத்தி தாபனத்திடம் கோரியிருந்தமைக்கு அமைவாகவே மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரின் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றில் உடலை இலங்கை கொண்டுவருவதற்கான வேண்டுதல் கடிதங்கள் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சவுதியில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை மற்றும் ஏனைய செயற்பாடுகள் தாமதமாகியதால் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டதாக வெளிவிகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று குறித்த சடலம் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் யூ.எல். 264ஆம் இலக்க விமானத்தில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று காலை 6.30க்கு வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு மனிதஅபிவிருத்தி தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பில் மனைவி தெரிவிக்கையில்,

ஜனவரி மாதம் எமது மூத்த மகள் யுகராசா லக்சிகா அகால மரணமடைந்த காரணத்தினால், எனது கணவர் இறுதிச் சடங்கிற்காக நாட்டிற்கு வந்தார்.

மீண்டும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி சவுதிக்கு சென்றார்.

சென்ற நாள் தொடக்கம் எம்முடன் தொடர்ந்து நன்றாக பேசி வந்ததுடன் வீட்டிற்கு சம்பளமும் அனுப்பிவந்தார்.

ஆனால், கடந்த 09ஆம் மாதம் 09ஆம் திகதி அவரது அறைக்கு பக்கத்து அறையிலிருந்த குடும்பத்தினர் எனக்கு தொலைபேசி ஊடாக உங்கள் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தனர்.

எனது கணவர் 09ஆம் மாதம் 08 ஆம் திகதி இரவு தொலைபேசியில் என்னுடனும் பிள்ளைகளுடனும் நன்றாகதான் பேசினார் என தெரிவித்தார்.

SHARE