சாப்பிட தெரியுமா?

321
எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று தெரிந்த உங்களுக்கு அந்த உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்.வாயில் பற்கள் இருப்பதற்கான காரணம் உணவை நன்கு மென்று சாப்பிடுவதற்குத்தான். மென்று சாப்பிடும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவுடன் கலந்து அதைக் கூழாக்க உதவும்.

அப்படி கூழான உணவு இரைப்பைக்குச் செல்லும்போது செரிமானம் சுலபமாக நடைபெறும்.

நன்றாக மெல்லாமல் அவசர அவசரமாக சாப்பிட்டோம் என்றால், அதை கூழாக்க இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிக அளவில் சுரக்கும்.

இரைப்பை நமது உணவை செரிக்க வைப்பதற்காக அதிகம் இயங்க வேண்டி வரும். அசிடிட்டி தொந்தரவு ஏற்படுவது கூட உணவைக் கூழாக்குவதற்காக அமிலச் சுரப்பு அதிகம் சுரப்பது காரணமாகும்.

தொண்டைக்குக் கீழே செல்வதெல்லாமே மலம் என்றொரு பழமொழி உண்டு. ஏனென்றால், தொண்டைக்குள்ளாகவே செரிமானம் முடிந்து விட வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

அதனால்தான் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதையே அனைத்து மருத்துவங்களும் வலியுறுத்துகின்றன.

பேசிக்கொண்டே சாப்பிட்டோம் என்றால் உணவை நன்றாக மெல்ல முடியாது. பேசாமல் வாயை மூடிக்கொண்டு சாப்பிடும் போதுதான் உமிழ்நீர் சுரக்கும் என்பதோடு, அப்போது ஏற்படும் வெப்பம் உணவைக் கூழாக்க உதவி புரியும்.

கையால் சாப்பிடுவதுதான் சரியான முறை. கையிலெடுக்கும்போது நாம் எவ்வளவு உட்கொள்ள முடியுமோ அந்த அளவைத்தான் எடுப்போம். உணவின் ருசி, மணம் மற்றும் அளவுக்கு ஒப்ப நாக்கு, வயிறு மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் தன்னை தகவமைத்துக் கொள்ளும்.

எவ்வாறு அமர வேண்டும்?

சம்மணமிட்டு அமர்ந்து குனிந்து சாப்பிடுவதுதான் சரியான முறை.

சம்மணமிட்டு அமர்தல் என்பது ஒரு ஆசன நிலை. அந்த நிலையில் அமர்ந்து குனிந்து சாப்பிடும்போதுதான் வயிற்றின் இயக்கு தசைகள் வேலை செய்யும்.

இரைப்பைக்குள் உள்ள காற்று வெளியேறி வாயுத் தொந்தரவுகள் ஏற்படாது. முக்கால் வயிறு நிறைந்ததுமே போதும் என்கிற நிலைக்கு வந்து விடுவோம்.

நின்று கொண்டு சாப்பிடும்போது குனிந்து நிமிர மாட்டோம்.

அதனால் இயக்கு தசைகள் வேலை செய்யாது என்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம்.

சம்மணமிட்டு அமரும்போது உடலின் ரத்த ஓட்டம் இரைப்பையை நோக்கிப் பாயும். எந்த ஒரு உறுப்பும் சரியாக வேலை செய்ய ரத்த ஓட்டம் தேவை.

நின்று கொண்டும், இருக்கையில் காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்தும் சாப்பிடும்போது ரத்த ஓட்டம் இரைப்பைக்கு சரியான அளவு கிடைக்காமல், கால்களுக்குச் சென்று விடும். இரைப்பைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து அது சரியாக இயங்கினால்தான் செரிமானத் தொந்தரவு வராது.

SHARE